இந்தி மட்டும் 3வது மொழி அல்ல.. ஒப்புக் கொண்ட தமிழக அரசுக்கு நன்றி.. அண்ணாமலை பரபர கருத்து!
சென்னை: மத்திய அரசு ஹிந்தி மொழியை மட்டுமே மூன்றாவது மொழியாகக் கொண்டு வரவில்லை என்பதை ஒப்புக்கொண்ட தமிழக அரசுக்கு முதலில் நன்றி என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கடிதத்திற்கு மழுப்பலான பதிலை தமிழக அரசு கூறியுள்ளதாகவும், பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்து தமிழக பள்ளி மாணவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மாணவர்களின் நலனில் அரசியல் செய்யாதீர்கள். பிஎம்ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கிறது. மற்ற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதால், தமிழ்நாடும் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கடிதத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். அந்த கடிதத்தில், இரு மொழிக் கொள்கையின் கீழ் படித்த மாணவர்களே அனைத்து துறைகளிலும் முதல்நிலையில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும். அதேபோல் 3வது மொழியை கற்பிக்க போதிய ஆசிரியர்களும் இல்லை என்று தெரிவித்தார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அதில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு, தமிழக அரசு, வழக்கமான மழுப்பல் காரணங்கள் கூறியுள்ளது.
அதேபோல் ஹிந்தி தவிர்த்து பிற மொழிகள் கற்பிக்கப் போதிய ஆசிரியர்கள் இல்லை என்று கூறியிருக்கிறது. மத்திய அரசு ஹிந்தி மொழியை மட்டுமே மூன்றாவது மொழியாகக் கொண்டு வரவில்லை என்பதை ஒப்புக்கொண்ட தமிழக அரசுக்கு முதலில் நன்றி. ஏற்கனவே பல ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது.
இதனால் உடனடியாக நீங்கள் வேறு இந்திய மொழிகளுக்கான ஆசிரியர்களை நியமித்து விடுவீர்கள் என்று திமுக அரசை அறிந்த யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் அதற்கான பணிகளைத் தமிழக அரசு தொடங்கலாம். தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டு, எந்தெந்த மொழிகளைக் கற்க மாணவர்கள் விரும்புகிறார்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
அதன் அடிப்படையில் அந்தந்த மொழிகளைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும். மேலும், திமுக அரசு நினைத்தால் தமிழ் மொழியில் பட்டம் பெற்று, ஆசிரியர் பணி கனவுடன் இருக்கும் தமிழக இளைஞர்களுக்கு, பக்கத்து மாநிலங்களின் தமிழக எல்லை மாவட்டங்களில் ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்யலாம். எனவே, கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications