போராடனும்னா நீங்க போராடுங்க.. எருமை மாட்டை நிற்க வைக்க கூடாது.. சென்னை ஹைகோர்ட் திட்டவட்டம்
சென்னை: ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விலங்குகளை வைத்து போராட அனுமதி தர முடியாது எனவும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சேர்ந்த புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் நிர்வாகி முத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், திருவண்ணைநல்லூர் பகுதியில் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்வதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு பட்டா வழங்க கூடாது என்றும் தனது மனுவில் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தான் அளித்த அந்த மனு மீது, அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், இதனைக் கண்டித்து, எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்த அனுமதிக்க கோரி காவல்துறைக்கு அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து, எருமை மாட்டுடன் போராட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி நிர்வாகி முத்து கோரியுள்ளார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது: ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது. எருமை மாட்டை காலை முதல் மாலை வரை நிற்க வைத்து போராட்டம் நடத்துவது மிருக வதை தடைச் சட்டத்தை மீறிய செயல். எருமை மாட்டுடன் போராட்டம் நடத்த அனுமதியளிக்க முடியாது என நீதிபதி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
இதனையடுத்து, விலங்குகளை பயன்படுத்தாமல் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. போராட்டம் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலித்து வழக்கமான நிபந்தனைகளுடன் போராட்டம் நடத்த அனுமதியளிக்கும்படி காவல்துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications