குடி பழக்கம் உள்ளவர்கள் தடுப்பூசி போட தயங்குவது ஏன்? உண்மையில் என்ன நடக்கும்?
சென்னை : தினசரி மதுபழக்கம் உள்ள பலர் தடுப்பூசி போட தயங்குகிறார்கள், தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மது அருந்த முடியாமல் போய்விடுமா என்ற பயத்தில் தடுப்பூசி போட மறுக்கிறார்கள். ஆனால் தடுப்பூசிக்கும் மது பழக்கத்திற்கும் சற்றும் சம்பந்தம் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
தமிழகத்தில் மொத்தமாக 22 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடத் தகுதியாகி தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள போதிலும், பண்டிகை காலம் என்பதால் தொற்று எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் தமிழக அரசு முடிந்த வரை தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் ஒவ்வொரு ஞாயிறு அன்று மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. இந்த முகாம்களில் ஏராளமான மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.

இரண்டு தவணை
தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைவதற்கான அறிகுறி காணப்படுகிறது. கடந்த 2 மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கீட்டில் 90% கொரோனா மரணங்கள், இரண்டு தவணை தடுப்பூசி போடாதவர்கள் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

22 லட்சம் பேர்
முதியோர்களில் 42% பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போட்டுகொண்டுள்ளார்கள் என்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது என்றும் தமிழகத்தில் மொத்தமாக 22 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடத் தகுதியாகி தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள் என்றும் ராதாகிருஷ்ணன் ஐஏஸ் பேட்டியில் கூறியிருந்தார்,

தடுப்பூசி
கடந்த மே 2ம் தேதி நிலவரப்படி ஒரு வாரத்தில் மட்டும 10 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கடந்தமே 3ம் தேதி ஞாயிறு அன்றும் ஏராளமான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர், தடுப்பூசி போடத் தகுதியான முதியோர்கள் மெகா தடுப்பூசி முகாமைப் பயன்படுத்தி இன்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை விரும்புகிறது

கரூர்
இந்நிலையில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை 5வது மெகா தடுப்பூசி முகாம் நடத்த உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அண்மையில் தெரிவித்தார், இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஷி குக்கர் உள்ளிட்டவை குலுக்கல் முறையில் வழங்கப்படும் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.
இது கரூர் மாவட்ட மக்களிடையே மிகுந்த சுவாரஸ்யத்தினையும், அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர்கள் விளக்கம்
இதனிடையே தினசரி மதுபழக்கம் உள்ள பலர் தடுப்பூசி போடுவதற்கு தொடர்ந்து தயங்குவதாக கூறப்படுகிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மது அருந்த முடியாமல் போய்விடுமா என்ற பயத்தில் தடுப்பூசி போட மறுக்கிறார்கள். இதனிடயே இதுபற்றி மருத்துவர்கள் கூறும் போது, ''மது அருந்துபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போடுவதால் மது அருந்துபவர்களுக்கு எந்தவொரு அதிகமான பக்கவிளைவுகளும் ஏற்படுவதாக தகவல்கள் இல்லை. அதனால் மது அருந்துபவர்கள் தாராளமாக கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம். அப்படி ஒரு கட்டாயமும் இதுவரை அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகளால் நிரூபணம் ஆகவில்லை" என்றார்கள்.

அச்சம் வேண்டாம்
தடுப்பூசி பெற்ற அன்று மட்டுமாவது மது அருந்துவதை தவிர்க்கலாம் என்பதே மருத்துவர்களின் பொதுவான(சொந்த) கருத்து. தடுப்பூசி பெற்ற பின் மது அருந்துவதை கட்டாயம் நிறுத்த வேண்டும் என்று அறிவியல் பூர்வமாக எந்த ஆய்வு முடிவுகளும் இல்லை. ஆயினும் தினசரி மூன்று வேளை அதிகமான அளவு மது குடிப்பது, தடுப்பூசியின் மூலம் கிடைக்கும் எதிர்ப்பு சக்தியை மந்தப்படுத்தும் என்கிறார்கள். மது விரும்பிகள் கொரோனா தடுப்பூசியை புறக்கணிக்காமல் அச்சம் கொள்ளதேவையில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மது அருந்தும் பழக்கம் இருப்பதால் கொரோனா தடுப்பூசி மூலம் ஆபத்து ஏற்படுமோ என்று தவறாக அஞ்சி தடுப்பூசி பெற மறுக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications