"நிறம்" மாறும் தலை?.. ஓபிஎஸ் + எடப்பாடிக்கு மேஜர் சறுக்கலே இதான்.. ஆளுக்கொரு ஆசை.. அல்லாடும் அதிமுக
கொங்கு & முக்குலத்தோர் சமுதாயங்களில் ஓபிஎஸ், எடப்பாடி செல்வாக்கை பெறுவார்களா?
சென்னை: எடப்பாடிக்கு எதிராக, ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக, கோர்ட் தீர்ப்புகள் வந்துள்ள நிலையில், கட்சிக்குள் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த இரு தரப்பிலுமே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன.. அந்தவகையில், கொங்கு + தென்மண்டலங்களில் தங்கள் வியூகங்களை கொட்டி, வேகமெடுத்துள்ளனர் இரு தலைவர்களும்..!
Recommended Video
ஒற்றை தலைமை என்ற விவகாரம் தலைதூக்கியபோதே, தென்மண்டலத்தை எடப்பாடியும், கொங்கு மண்டலத்தை ஓபிஎஸ்ஸும் குறி வைத்து நகர்ந்தனர்..
ஆளுக்கு ஒரு பக்கம் சுற்றுப்பயணத்தை இந்த பகுதிகளில் மேற்கொண்டனர்.. ஆனால், இருவருக்கும் அதனால் போதிய பலன் கிடைத்ததா? என்றால் அவ்வளவாக இல்லை என்றே சொல்லலாம்.
சமூக புள்ளிகள்
ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, முக்குலத்தோர் என்ற அடையாளத்தை பெற்றவர்.. அதிலும் ஜெயலலிதா இறந்தபிறகு, அந்த அடையாளத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியே அரசியல் செய்தவர்.. தன் சார்பில் நியமிக்கப்படும் நிர்வாகிகள் யாராக இருந்தாலும், தன்னுடைய தென்மண்டல பிரமுகர்களை முன்னிறுத்தி வந்தார்.. போதாக்குறைக்கு சசிகலாவை பகிரங்கமாக எதிர்க்காதது, மகன், தம்பி என இவர்கள் சென்று சசிகலாவை சந்தித்து விட்டு பேசிவந்தது, ராஜ்ய சபா சீட் பரிந்துரை உட்பட அனைத்துமே தன் சமூக புள்ளிகள் இருப்பதாகவே கவனத்துடன் செயல்பட்டதை, இந்த தமிழகம் கண்டது.
ஓட்டைகள்
இப்படிப்பட்ட அடையாளத்துடன், கொங்குவில் என்ட்ரி தரும்போதுதான், அதனால் பெரிய பலன் கிடைக்கவில்லை.. அதேசமயம், எடப்பாடி பழனிசாமியால் கொங்குவில் குறிப்பாக சேலத்தில் ஏற்படுத்திய ஓட்டைகளை மட்டுமே அவரால் தனக்காக பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.. இப்போதும், அதை வைத்துதான் சேலத்தை கணக்கு செய்து வருகிறார்.. எடப்பாடிக்கு எங்கெல்லாம் சறுக்கல்கள் கிடைத்ததோ, அவரால் யாரெல்லாம் அதிருப்தியில் உள்ளனரோ, அவர்களை குறி வைத்து தட்டி தூக்க முயல்கிறாரே தவிர, தனிப்பட்ட ஆளுமையை அவரால் கொங்குவில் நிலைநிறுத்த முடியவில்லை என்பதே உண்மை.. அதுவும் எடப்பாடி முதல்வராக இருந்ததுவரை அந்த கோட்டையில் நுழையவே முடியவில்லை.. அப்படியே, வலுவாக நிலைநிறுத்த முயன்றாலும் அதற்கு கொங்கு மண்டல பாஜக எப்படி ரியாக்ட் செய்யுமோ தெரியாது.
மைனஸ் பாயிண்ட்
அதேபோல, தென்மண்டலத்தை பொறுத்தவரை, எடப்பாடியின் கொங்கு அடையாளமே அவருக்கு மைனஸ் பாயிண்ட்டாக அமைந்துவிட்டது.. ஏற்கனவே, தேவர் ஜெயந்தி விழாவுக்கு, பசும்பொன்னுக்கு எடப்பாடி செல்லாத கோபம் இன்னும் அந்த சமூகத்தினரிடம் உள்ளது.. ஓபிஎஸ் + சசிகலா இருவரையுமே நேரில் சந்திக்க நேரிடும் என்பதாலேயே அப்போது இந்த பயணம் தவிர்க்கப்பட்டதாக சொல்லப்பட்டது.. அதேபோல, மாயத்தேவருக்கும் அஞ்சலி செலுத்த எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை.. இதுவும் அச்சமுதாய மக்களிடம் வருத்தத்தையும், அதிருப்தியையும் கூட்டி உள்ளது.
டேமேஜ்
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய விவகாரத்திலேயே எடப்பாடி மீது தென்மண்டலத்தில் அதிருப்தி அலை வீசிய நிலையில், மேற்கண்ட இரு தலைவர்களின் நிகழ்வுகளிலும் எடப்பாடி பங்கேற்காதது, கூடுதல் மைனஸ் பாயிண்ட்டாக அமைந்துவிட்டது.. போதாக்குறைக்கு இந்த நிகழ்வுகளை வைத்தே, எடப்பாடியை டேமேஜ் செய்து, ஓபிஎஸ் செய்த அரசியலும் அளப்பரியது.. எடப்பாடி பழனிசாமியை முக்குலத்தோருக்கு எதிரானவர் என்கிற முத்திரையை குத்தும் படலமும் ஆரம்பமானது.
போஸ்டிங்
என்னதான், திண்டுக்கல் சீனிவாசன், ராஜன் செல்லப்பா, நத்தம் விஸ்வநாதன், உதயகுமார் என தெற்கின் தலைகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தாலும், இவர்களுக்கெல்லாம் முக்கிய பொறுப்புகளை தந்து, அச்சமூக மக்களின் அதிருப்தியை துடைக்க முனைந்தாலும், தனிப்பட்ட முறையில் எடப்பாடிக்கு ஆதரவுகள் அங்கு கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.. கடந்த மாதங்களில் எடப்பாடி எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வி என்றும் சொல்கிறார்கள்..
ஓபன் டாக்
அதுமட்டுமல்ல, கடந்த ஆட்சியில் கொங்கு மண்டலம் மற்றும் வடக்கு மண்டலத்தை சேர்ந்த தன்னுடைய ஆதரவாளர்களுக்கே எடப்பாடி அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்ற குறையும் அழுத்தமாகவே பதிந்துள்ளது.. இந்த குறையை மையமாக வைத்துதான், வைத்திலிங்கம் அரசியல் செய்து வருகிறார்.. இதை வெளிப்படையாகவே தெரிவித்து, தன்னுடைய ஆதங்கத்தையும் கொட்டி வருகிறார்.. எனவே, எடப்பாடிக்கு தெற்கு எதிராக திரும்பி நிற்பதாக பேச்சு அடிபட்டு வருகிறது.. இன்னொன்றையும் கிளப்பி விட்டுள்ளனர்..
நிறம் + கலர்
தென் மாவட்டங்களுக்கு எடப்பாடியால் வர முடியாது, அப்படியே வந்தாலும் தென் மாவட்ட நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் எடப்பாடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவோம் என்றும் தகவல்கள் பறக்கின்றன.. இதெல்லாம் உண்மையா? அல்லது மாற்று தரப்பினரால் பரப்பிவிடப்படும் தகவல்களா என்று உறுதியாக தெரியவில்லை.. ஆனால், எடப்பாடி மீதான அதிருப்தி அலைகள், ஆதரவு அலைகளாக மாறுமா? ஓபிஎஸ் தன்னுடைய தனித்துவத்தை கொங்குவில் பதிப்பாரா? ஓபிஎஸ், எடப்பாடி இருவரின் மண்டல "நிறங்கள்" மாறுமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!