சென்னை கால்பந்து வீராங்கனை பலி.. அரசு மருத்துவர்கள் கவனக்குறைவே காரணம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: அரசு மருத்துவமனையில் கால் அகற்றப்பட்ட 17 வயது வீராங்கனை பிரியா உயிரிழந்த நிலையில், 2 அரசு மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாகவே கால் அகற்றப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கால்பந்து வீராங்கனை பிரியா. 17 வயதான இவர் மாவட்ட, மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் விளையாடி உள்ளார்.
வளரும் இளம் வீராங்கனையான இவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்தபோது ரத்த ஓட்டம் தடைபட்ட நிலையில் கால் அகற்றப்பட்டது. இந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார்.
சென்னையில் கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்.. தவறான சிகிச்சை என குடும்பம் கதறல்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த ஓராண்டுக்கு முன்னால் மாணவிக்கு வலது காலில் காயம் ஏற்பட்டு ஜவ்வு பாதிக்கப்பட்டது. 2 வாரங்களுக்கு முன்பும் அதே பாதிப்பு வலது காலில் ஏற்பட்டு இருக்கிறது.
அறுவை சிகிச்சை
இதற்கு சிகிச்சை மேற்கொள்ள பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் கடந்த 7 ஆம் தேதி சிகிச்சை பெற்றார் பிரியா. அவருக்கு மருத்துவர்கள் ஆர்த்தோஸ்கோபி எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக சிகிச்சையை வெற்றிகரமாக செய்து உள்ளார்கள்.
இருக்கமான கட்டு
ஆனால், மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக சிகிச்சைக்கு பிறகு ரத்த பெருக்கத்தை தடுக்க இறுக்கமாக கட்டு கட்டியுள்ளார்கள். ஆனால், இறுக்கமாக கட்டு போடப்பட்டதால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்த நாளங்கள் எல்லாம் பழுதாகி மிகப்பெரிய அவதிக்கு உள்ளாகி உள்ளார் பிரியா.
முதலமைச்சர் அறிவுறுத்தல்
இதன் காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு 8 ஆம் தேதி அவர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவரை அனைத்து துறை மருத்துவ வல்லுநர்களும் உன்னிப்பாக கவனித்து மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதை தீவிரமாக கவனிக்க அறிவுறுத்தினார்.
நின்ற ரத்த ஓட்டம்
நேற்று முந்தினம் நாங்கள் மருத்துவமனைக்கு வந்து பிரியாவை பார்த்து சென்றோம். குழந்தை அப்போது நலமோடு இருந்தார். தொடர்ச்சியாக ரத்த நாளங்களின் பாதிப்பை அடுத்து ரத்த ஓட்டம் நின்றுவிட்டதால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
உறுப்புகள் பாதிப்பு
இதன் காரணமாக எலும்பு சிகிச்சை நிபுணர், மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர், மயக்கவியல்துறை நிபுணர், சிறுநீரகவியல் நிபுணர், பொது மருத்துவ நிபுணர்கள், மூத்த மருத்துவ வல்லுநர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தார்கள். நேற்று நள்ளிரவுக்கு மேல் சிறுநீரகம், ஈரல், இதய பாதிப்பு ஏற்பட்டது.
உயிரிழப்பு
ரத்த ஓட்டம் தடைபட்டதால் தொடர்ச்சியாக பாதிப்புகள் ஏற்பட்டன. இன்று காலை 7:15 மணிக்கு குழந்தையின் உயிர் பிரிந்துள்ளது. இது ஈடு செய்ய முடியாத இழப்பு. 2 நாட்களுக்கு முன் குழந்தையின் பாதிப்பு தெரிந்தவுடன் முதலமைச்சரின் அறிவுறுத்தலை ஏற்று இதுகுறித்து விசாரிக்க மருத்துவ வல்லுநர் குழுவை அமைத்தோம்.
கவனக்குறைவே காரணம்
அந்த குழு பெரியார் நகர் மருத்துவமனையில் விசாரித்தபோது, அறுவை சிகிச்சை செய்த 2 மருத்துவர்களின் கவனக்குறைவு இதற்கு ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டது. நேற்று காலை 2 பேரும் தொலைதூர இடமாற்றம் செய்யப்பட்டார்கள். தொடர் விசாரணை நடத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருத்துவர்கள் இருவரும் இன்று பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்.
நிவாரணம்
வீராங்கனையின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணத்தை உடனடியாக வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதேபோல் பிரியாவின் குடும்பத்தின் வறுமை நிலையை மனதில் வைத்து அவரது சகோதரரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முடிவெடுத்து உள்ளோம். போலீசில் புகாரளித்து சட்ட நடவடிக்கையும் எடுப்போம்.