அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கப்படுமா? - இன்று மீண்டும் விசாரணை.. பரபரப்பில் நிர்வாகிகள்!
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்கக் கோரி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

வழக்கு
ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, திண்டுக்கல்லை சேர்ந்த எஸ்.சூர்யமூர்த்தி என்பவர் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த பெருநகர 4-வது உதவி உரிமையியல் நீதிபதி பிரியா, விசாரணையை ஜூலை 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும்
இந்நிலையில், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி சூர்யமூர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி எஸ்.பிரியா முன்பு நேற்று நடந்தது. அப்போது சூர்யமூர்த்தி ஆஜராகி, அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷத்தால் தற்போது அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. பொதுக்குழு கூட்டம் நடந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். இதனால் தமிழகத்தில் தேவையற்ற பிரச்சினைகள், கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்துள்ளன என்பதால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

ஓ.பி.எஸ் கடிதம்
இந்த வழக்கு விசாரணையின்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் பி.ராஜலட்சுமி ஆஜராகி, "பொதுக்குழு கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்படவில்லை. கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள அஜெண்டா என்ன என்பது குறித்து தெரிவிக்காமல் நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்கலாம் என கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்" எனத் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் தாக்கல்
மேலும், ஓ.பி.எஸ் அனுப்பிய கடிதம், அதிமுக தலைமைக் கழகத்தால் ஜூன் 19-ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு பெறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை நடத்த முடியும். ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் பொதுக்குழுவை நடத்த முடியாது" எனத் தெரிவித்து ஓ.பி.எஸ் எழுதிய கடிதத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

எடப்பாடி பழனிசாமி
பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் விக்னேஷ், திண்டுக்கல் சீனிவாசன் தரப்பில் வழக்கறிஞர் விஜய பிரசாந்த், கே.ஏ.செங்கோட்டையன் தரப்பில் வழக்கறிஞர் எல்.பி.சண்முகசுந்தரம் ஆகியோர் ஆஜராகி, மனுதாரர் தரப்பு வாதத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். மனுதாரர் அதிமுக உறுப்பினரே இல்லை என்பதால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. இதை நிராகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மனுதாரர் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு, தான் உறுப்பினர் இல்லை என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என வாதிடப்பட்டது.

ஒத்திவைப்பு
இதைத்தொடர்ந்து நீதிபதி எஸ்.பிரியா, இதுதொடர்பாக இந்த வழக்கின் எதிர் மனுதாரர்களாக உள்ள அதிமுக தலைமைக் கழகம், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தமிழ்மகன் உசேன், சி.பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ப.தனபால் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்றைய தேதிக்கு (ஜூன் 21) தள்ளி வைத்தார்.
Recommended Video

இன்று விசாரணை
அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. அதே சமயம், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், பொதுக்குழுவை தள்ளி வைக்குமாறு பதில் மனுவில் குறிப்பிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு நடக்குமா என்பதை இன்றைய விசாரணை தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications