”கிராமப்புற அரசுப்பள்ளிகளில் சாதிய பாகுபாடு” கல்வி அறக்கட்டளை விழாவில் உடைத்து பேசிய நடிகர் கார்த்தி
சென்னை: தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதிய பாகுபாடு இருப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஸ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் சார்பில் 43வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் மற்றும் கார்த்தி கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு விழாவில் நடிகர் சிவக்குமார் பேசுகையில், ஏழையாக இருந்தாலும், எந்த சாதியாக இருந்தாலும் கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் வாழ்க்கையில் உயர்வை எட்டலாம் என்று தெரிவித்தார்.

நடிகர் கார்த்தி பேச்சு
இதனைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி பேசுகையில், கல்வி என்பது நமது வாழ்கைக்கு தேவையான சிந்தனையை உருவாக்குகிறது. அறிவை வளர்த்துக் கொள்வதற்காக தான் கற்பித்தல், கற்றல் ஆகியவை செய்கிறோம் என்ற எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும். அப்படிவந்தால் மட்டுமே இங்கு மாற்றத்தை காண முடியும். ஆனால் நமது சமூகத்தில் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் கல்விமுறை உள்ளது.

அகரம்
சிவக்குமார் கல்வி அறக்கட்டளையும் அப்படிதான் இயங்கி வந்தது. அதன் பின்னர் அகரம் வந்த பின்னர், சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஏனென்றால் எங்கு படித்து, எந்தப் பகுதியில் இருந்து மதிப்பெண் பெறுகிறார்கள் என்பது முக்கியமாக பார்க்கப்பட்டது.
அகரம் மூலம் படிக்கும் மாணவர்கள் மலையில் இருந்து 6 முதல் 7 கிமீ வரை வந்து கல்வி கற்ற பின், மீண்டும் மலையேற வேண்டும். அவர்கள் மீண்டும் வீடு செல்வதற்கான வசதி இருக்காது. அங்கிருந்து படிக்கும் மாணவர் 50 மதிப்பெண் வாங்குவது பெரிதா அல்லது என் போன்ற ஒரு மாணவர் ஏசி அறையில் அமர்ந்து படித்து மதிப்பெண் பெறுவது பெரிதா என்று யோசித்தோம்.

ஜாதிப் பிரச்னை
கூரை இல்லாத வீட்டில் கூட மனிதம் நிறைய இருக்கிறது. சூர்யா அடிக்கடி சொல்வார் நல்லது செய்யணும் என்று நினைப்பவர்களை அகரம் ஒன்று சேர்க்கிறது. அகரம் 1,500 மாணவர்களுக்கு தனியாக உணவுடன் தங்கும் விடுதி வசதி வழங்கி வருகிறது. நகரத்திற்கு அங்கிருந்து அரசு பள்ளியில் படித்து இங்கு வந்து சாதனை புரிந்து கொண்டு இருக்கிறார்கள். கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதி பாகுபாடு இருந்து வருகிறது.

போதைப்பழக்கம்
பள்ளி வரைக்கும் போதை பழக்கம் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. என்ன பெயர் என்று தெரியாமல் கூட விற்பனை செய்கிறார்கள். பிரச்சனைகளை சந்திக்க முடியாமல் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். மது குடித்தாலோ, சிகரெட் பிடித்தாலோ வாசம் வரும் ஆனால் போதை பொருள் அப்படி இல்லை. அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் கார்த்தி கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications