சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது.. 92.93% தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் இரண்டாமிடம்
சென்னை: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் 83.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் மாணவிகள் இருவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
காசியாபாத்தை சேர்ந்த ஹன்சிகா சுக்லா முசாபர்நகரை சேர்ந்த கரிஷ்மா ஆகிய இருவரும் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். அதே போல சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் மண்டல அளவில் திருவனந்தபுரம் முதலிடம் பெற்றுள்ளது.
திருவனந்தபுர மண்டலத்தில் 98.2 சதவீதமும், சென்னை மண்டலத்தில் 92.93 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். டெல்லி மண்டலம் 91.87 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாமிடம் பிடித்துள்ளது.
காதலருடன் சீருடையில் அந்தரங்கமாக இருந்த பெண் போலீஸ் டிரான்ஸ்பர்!
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 2 துவங்கி ஏப்ரல் 4 வரை நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்ற இந்த பொதுத்தேர்வை 18.1 லட்சம் மாணவர்கள், 12.9 லட்சம் மாணவிகள் என சுமார் 31 லட்சம் பேர் எழுதினர். இந்தியாவில் 4,974 தேர்வு மையங்களிலும், வெளிநாடுகளில் 78 தேர்வு மையங்களிலும் இந்த பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.
ஏப்ரல் 4-ம் தேதி தேர்வுகள் முடிந்த நிலையில் மே 3-வது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வுகள் முடிந்து 1 மாதத்திற்குள்ளாகவே முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன
தமிழகத்தில் நிகழ்வாண்டில் பிளஸ் 2 மாநில பாடத்திட்ட தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டது. திட்டமிட்டபடி மே 3-வது வாரத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 12 ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படும்.
அதாவது அவர்களுக்கு கலைக்கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போகும் சூழல் ஏற்படும். இந்த சூழலை கருத்தில் கொண்டே முன்கூட்டியே தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.