பெண்கள் படிக்கும் பள்ளிகளில் சிசிடிவி கேமரா கட்டாயம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்
பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை: பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. பெண்கள் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களை அவசியம் பொருத்த வேண்டும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆசிரியர்கள் மாணவிகளிடம் அத்துமீறுவதும் அவர்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுப்பதும் முன்பை விட அதிகரித்துள்ளது. கோவையில் பள்ளி மாணவிக்கு ஆசிரியர் அளித்த பாலியல் தொந்தரவு காரணமாக மாணவி தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார். அடுத்த சில தினங்களில் கரூரில் பள்ளி மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சீனாபுரத்திலுள்ள அரசு பள்ளி உயிரியல் ஆசிரியர் திருமலை மூர்த்தி, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின்கீழ கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோர்கள் கொடுத்த புகாருக்கும், மாணவிகள் கொடுத்த புகாருக்கும் தலைமை ஆசிரியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், எனவே தலைமை ஆசிரியரை கைதுசெய்ய வலியுறுத்தியும் மாணவர்கள், பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து தலைமை ஆசிரியர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு அரசு உள்ளது. எனவே பெண்கள் படிக்கும் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று கூறியுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி மாணவிகளுக்கு சில பிரச்சினைகள் வருகின்றன. பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்று கூறினார். பெண்கள் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களை அவசியம் பொருத்த வேண்டும் என்றார்.
ஆசிரியர் மாணவியிடம் பாலியல் செயலில் ஈடுபட்டார் என்பதால் ஆசிரியர்கள் அனைவரையும் குறைகூற முடியாது என்று கூறிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளில் மாணவிகள் இதுபோன்ற பாலியல் புகார் கூறினால், அதை உடனடியாக துறையின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
Recommended Video
பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்று பாலியல் புகார்களை மறைக்க முயலக் கூடாது. மாணவிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் பள்ளி வெளிப்படையாக நடவடிக்கை எடுக்கிறது என்று பள்ளியின் மீது பெற்றோருக்கு நம்பிக்கை அதிகரிக்குமே தவிர நற்பெயருக்கு களங்கம் ஏற்படாது என்றும் தெரிவித்தார். மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.