மலைப் பகுதியில் கிடந்த மூன்று ராக்கெட் லாஞ்சர்கள்! குவிக்கப்பட்ட போலீசார்! செங்கல்பட்டில் பரபரப்பு
சென்னை: செங்கல்பட்டு அருகே ராணுவ பயிற்சி முகாம் இயங்கி வந்த பகுதியில் ராக்கெட் லாஞ்சர்கள் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்துள்ள சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள அனுமந்தபுரம் மலை பகுதியில் ராணுவ பயிற்சி முகாம் செயல்பட்டு வந்தது.
ராணுவ பயிற்சி முகாம் நடந்து வந்த போது ராணுவ வீரர்களுக்கு இங்கு பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஓராண்டாக இந்த பயிற்சி முகாம் செயல்படவில்லை.
ராணுவ பயிற்சி முகாம்
ராணுவ பயிற்சி முகாம் இயங்கி வந்த போது அங்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி, ராக்கெட் லாஞ்சர்கள் என ராணுவ வீரர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. கடந்த ஓராண்டாக அங்குப் பயிற்சி எதுவும் நடைபெறவில்லை என்பதால் அந்த இடம் அப்படியே விடப்பட்டது. அங்குப் பாதுகாப்பும் கூட எதுவும் போடப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
மாடு மேய்க்கச் சென்றவர்கள்
இதனிடையே நேற்றைய தினம் அனுமந்தபுரம் மலை பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற சிலர், ராணுவ பயிற்சி முகாம் நடந்த இடத்தில் எதையோ புதிதாகப் பார்த்துள்ளனர். அருகே சென்று பார்த்த போது, அது சினிமாவில் வரும் ராக்கெட் லாஞ்சர்கள் போல இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கு மாடு மேய்க்கச் சென்றவர்கள் இது தொடர்பாக மறைமலை நகர் காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
ராக்கெட் லாஞ்சர்கள்
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயல் இழத்தல் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்தனர். ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ராக்கெட் லாஞ்சர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது மறைமலை நகர் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
பாதுகாப்புப் பணி
ராக்கெட் லாஞ்சர் என்பதால் நீதிமன்றத்திடம் இருந்து உத்தரவு பெற்ற பின்னரே இதைச் செயலிழக்க வைக்க வேண்டும். இதன் காரணமாக தற்பொழுது அதைச் சுற்றிப் பாதுகாப்பு அரணாக 30 மணல் மூட்டை அடுக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றிலும் சிவப்பு கொடிகளும் நடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு பெற்று வெடிகுண்டுகள் செயலிழக்கம் செய்யப்படும் வரை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனக் கூறப்படுகிறது.
விசாரணை
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவை ராணுவ பயிற்சி நடைபெற்ற போது, ராணுவ வீரர்கள் பயன்படுத்திய ராக்கெட் லாஞ்சர்களா அல்லது இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். அதேபோல நீதிமன்ற உத்தரவு பெறும் நடவடிக்கையும் மறுபுறம் நடந்து வருகிறது.