விடாமல் துரத்தும் கருமேகம்.. சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை.. புறநகரிலும் வெளுத்து வாங்கியது
சென்னை: சென்னையில் நேற்று இரவில் முதல் தொடர்ந்து பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. புறநகரிலும் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கி வெளுத்து வாங்கி வருகிறது. இடையில் சில நாட்கள் ஓய்வு எடுத்த பருவமழை தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களில் பெய்து வருகிறது.
இதன்மூலம் தமிழகத்தில் வடகிழக்கு பருவழை தீவிரமாகி உள்ளது. இது ஒருபுறம் இருக்க வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுகிறது. இதனால் தமிழகத்துக்கு இன்னும் கூடுதலாக மழை கிடைக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

டெல்டாவுக்கு ரெட் அலர்ட்
இந்நிலையில் தான் தமிழகத்தில் ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையே தான் இன்றும் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழை எச்சரிக்கை
மேலும் திருவள்ளூர், சென்னை, வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையில் கொட்டி தீர்த்த மழை
இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், சாந்தோம் காமராஜர் சாலை, போரூர், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், சைதாப்பேட்டை, ராமாபுரம், கிண்டி, ஆலந்தூர் உள்பட பல இடங்களில் விடாமல் மழை பெய்தது. சென்னை கிண்டி ஒலிம்பியா பகுதி சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. பிற இடங்களில் மழை நீர் வேகமாக வடிந்தது.

புறநகர் பகுதிகளில் மழை
இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான ஓஎம்ஆர், ஈசிஆர் மற்றும் அதனை சுற்றிய பல இடங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின்தடைகள் ஏற்பட்டன. சென்னை, சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தாலும் கூட சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணியால் நிறைய இடங்களில் தண்ணீர் தேங்காமல் வழிந்தோடியது. இது சென்னை மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.

வியாபாரிகள் பாதிப்பு
இருப்பினும் கூட நேற்று இரவு தொடங்கிய கனமழை இன்று காலை வரை தொடர்ந்ததால் வாகனங்களில் செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் அதிகாலையில் வேலைக்கு செல்ல வேண்டியவர்கள் மழையால் அவதிக்குள்ளாகினர். பால் வியாபாரிகள், பத்திரிகை வியாபாரிகள், ஓட்டல் தொழிலாளிகள், டீ வியாபாரிகள் மழையால் பாதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications