கொரோனாவால் இறந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த 12 பேருக்கு ஜாமீன்
சென்னை: கொரோனா வைரஸுக்கு பலியான மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததாக கைது செய்யப்பட்ட 12 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், உடல் அடக்கம் குறித்த நடைமுறைகளை முன்கூட்டி மக்களுக்கு தெரிவித்திருந்தால் இச்சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நரம்பியல் நிபுணர் சைமன் ஹெர்குலஸ் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அதிகாரிகளை அங்கு இருந்து துரத்தியதாகவும் டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ்வேந்தன், அப்பு, மோகன், ஜெயமணி, ஜெயப்ரதா, ஜெனிதா, மாரியம்மாள், சரஸ்வதி, கிருஷ்ணவேணி, தினேஷ், மஞ்சுளா, பத்மபிரியா ஆகிய 12 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி நிர்மல்குமார் விசாரித்தார். மனுக்கள் மீதான விசாரணையின் போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல் அடக்கம் செய்யப் போவதாக வந்த தகவலை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பின் அதிகாரிகள் உடலை எடுத்துச் சென்ற பின் கலைந்து சென்று விட்டதாகவும், ஆனால் தங்களை காவல் துறையினர் கைது செய்துள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், மனுதாரர்கள் அரசு ஊழியர்கள் தங்கள் கடமையைச் செய்ய விடாமல் தடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், கொரோனா பாதித்து பலியானவரின் உடலில் இருந்து வைரஸ் பரவும் என்ற வதந்தி காரணமாக மனுதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் எனச் சுட்டிக்காட்டி, 12 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்யும் நடைமுறைகள், வழிமுறைகள் குறித்து அரசு அதிகாரிகள், முன்கூட்டியே அப்பகுதி மக்களுக்கு தெரிவித்திருந்தால், இந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
மனுதாரர்கள் அனைவரும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான பிணையை செலுத்த வேண்டும் எனவும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும், தலைமறைவாகக் கூடாது எனவும், சாட்சிகளை கலைக்க கூடாது எனவும் நீதிபதி நிபந்தனைகளை விதித்துள்ளார்.