யூ டியூபர் கிஷோர் கே சுவாமி மீதான குண்டர் சட்டம் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை: யூ டியூபர் கிஷோர் கே சுவாமி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூ டியூபரான கிஷோர் கே சுவாமி முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் என்பவர் புகார் செய்திருந்தார் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கிஷோர் கே சுவாமியை கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவரை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

கிஷோர் கே சுவாமி
கிஷோர் கே சுவாமி சிறை சென்ற பிறகும் அவர் மீது பலரும் புகார் கொடுத்தனர். இதனால் கிஷோர் கே சுவாமி மீது மேலும் பல வழக்குகள் பாய்ந்தன. அவர் மீதான 7 வழக்குகளில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுளளதாக போலீசார் தெரிவித்தனர். சினிமா நடிகை ரோகிணியும் கிஷோர் மீது புகார் அளித்திருந்தார. இதேபோல் பல தரப்பினரும் புகார் கொடுத்திருந்தனர்.

குண்டர் தடுப்பு சட்டம்
இதனை தொடர்ந்து கிஷோர் கே.சுவாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல்துறை ஆணையர் கடந்த ஜூன் 25 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது அப்பா கிருஷ்ணசுவாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

குண்டர் தடுப்பு சட்டம் ரத்து
இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர். ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பாயிண்ட் பாலாஜி ஆஜராகி வாதிட்டார். இவரது வாதத்தை அடுத்து, கிஷோர் கே சுவாமி மீதான குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஜாமின் பெற்றுள்ளார்
கிஷோர் கே சுவாமி தனது மீதான 7 வழக்குகளில் ஏற்கனவே ஜாமின் பெற்றுள்ளார். எனவே, அவர் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியே வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications