இரண்டு அமைச்சர்களுக்கு பெரும் நிம்மதி..! முக்கிய வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!
சென்னை: பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 131-வது வார்டுக்கு கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

போலீசில் புகார்
அப்போது கே.கே.நகரில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து, தேர்தல் அலுவலரிடம் இருந்து முத்திரையை பறித்துச் சென்றதாகவும், அதை தட்டிக்கேட்ட தன்னை துரத்தியதுடன், தனது காரை சேதப்படுத்தி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் கூறி தி.மு.க.வின் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியம் உள்ளிட்ட சிலர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
அ.தி.மு.க பிரமுகர் சந்தோஷ் என்பவர் அளித்த இந்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியம் உள்ளிட்ட தி.மு.க.வினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் முறையான புலன் விசாரணையை நடத்தவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் துவங்கப்படவில்லை எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கு ரத்து
அதேசமயம், மனுக்கள் மீது மனுக்களை தாக்கல் செய்து விசாரணையை தாமதப்படுத்தியதாக காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பு வழங்கினார். கார் பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டதா? என்பது குறித்து சேத மதிப்பீட்டு அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு இந்த எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறி வழக்கை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். மா.சுப்பிரமணியம் தற்போது சுகாதாரத்துறை அமைச்சராகவும், தா.மோ.அன்பரசன் ஊரக தொழில்துறை அமைச்சராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications