எஸ்.பி.வேலுமணிக்கு இறுகும் பிடி.. டென்டர் முறைகேடு.. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு
வேலுமணியின் டெண்டர் முறைகேடு வழக்கில் முக்கிய உத்தரவு கோர்ட் பிறப்பித்துள்ளது
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை ஹைகோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்ளாட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்பி வேலுமணி.
இவர் கை காட்டும் நபர்களுக்கே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி அவர் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தோல்வி தொட்டதே இல்லை.. கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின்
ஆர்எஸ் பாரதி
அதேபோல், அறப்போர் இயக்கமும் எஸ்பி வேலுமணி மீது வழக்கு தொடர்ந்திருந்தது... அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில், 2018 செப்டம்பர் 12ஆம் தேதியன்று சிபிஐ மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்ததில், 2014 ஜூன் முதல் 2015 நவம்பர் வரை கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சுற்று சுவர் அமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல் உள்ளிடவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவித்திருந்தனர்...
டென்டர் ஒதுக்கீடு
இந்த வழக்குகளில் வேலுமணி தாக்கல் செய்த பதில் மனுவில், அமைச்சர் என்ற முறையில் கொள்கை முடிவுகளை மட்டுமே எடுத்ததாகவும், மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் தலையிடுவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், டெண்டரில் எந்த வகையிலும் தொடர்பில்லாதவர்கள் வழக்கை தொடர்ந்துள்ளதாகவும், மாறியுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடிந்து போன டென்டர் ஒதுக்கீட்டு வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்க முடியாது எனவும் அவர் தனது பதில் மனுவில் தெரிவித்திருந்தார்.
நிலுவை வழக்கு
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், மேற்கொண்டு இந்த விவகாரத்தை நிலுவையில் வைக்காமல் அறப்போர் இயக்க, திமுக தொடர்ந்த வழக்குகளை முடித்துவைக்கலாம் என வாதிட்டார்.
அறப்போர் இயக்கம்
எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விட்டதால், தங்கள் வழக்கை முடித்து வைக்கலாம் என திமுக தரப்பிலும், வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்வது மட்டும் கோரிக்கை அல்ல. உடந்தையாக இருந்தவர்கள், பலனடைந்தவர்கள் ஆகியோரை வழக்கில் சேர்க்கும் வகையில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். மேற்கொண்டு நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என அறப்போர் இயக்கம் சார்பிலும் வாதிடப்பட்டது.
விசாரணை அறிக்கை
வேலுமணி தரப்பில் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தனக்கு எதிரான வழக்கு எந்த அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும் என தெரிவித்தார். இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்புடைய அதிகாரிகள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது, ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை கேட்கிறார்கள், கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
ஆரம்ப விசாரணை
வேலுமணி சார்பில், ஆரம்ப விசாரணை அறிக்கை பெறுவதற்கான உரிமை உள்ளது என்று வாதிடப்பட்டது.
அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், ஏற்கனவே கடந்த ஆட்சியில் வழக்கை முடித்து வைத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தோம், ஏற்கனவே இரண்டு மத்திய தணிக்கை துறை அறிக்கைகள் எதிராக உள்ளது, எனவே அவருக்கு கடந்த ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
கீழமை நீதிமன்றம்
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், விசாரணையை முடித்து பத்து வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். முந்தைய ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை வழக்கில் சேர்த்தால், கீழமை நீதிமன்றத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.