சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டர் தண்ணீர் தொட்டியில் ஊழியர் மரணம்.. 7 நாட்களாக கிடந்த சடலம்
சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்த ஊழியர்
சென்னை: சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் தண்ணீர் தொட்டியில் ஊழியர் ஒருவர் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியில் ரோகிணி தியேட்டர் உள்ளது. மெட்ரோ ரயில்நிலையம், மார்க்கெட் பகுதிக்கு அருகே உள்ள இந்த தியேட்டர் ரசிகர்களுக்கு பிடித்தமான தியேட்டராகும். இங்கு நேற்று மதியம் தியேட்டரில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக ராமமூர்த்தி என்பவர் வந்தார்.
அப்போது தொட்டியில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்பதை பார்க்க அதன் மூடியை திறந்தார். அப்போது துர்நாற்றம் வீசியது. உள்ளே எட்டி பார்த்த போது அழுகிய நிலையில் ஆண் ஒருவரது சடலம் கிடந்தது.
சீட்டில் யாரு? அவங்களா.. துணிவு படம் ஓடிய தியேட்டரில் லைட் அடித்து பார்த்தால்! அட அந்த லேடி எம்எல்ஏ?
அலறிய ஊழியர்
இதையடுத்து அலறி அடித்துக் கொண்டு தியேட்டர் மேலாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தியேட்டர் மேலாளர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் தியேட்டருக்கு போலீஸார் சென்றனர். பின்னர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் ஆண் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப் பதிவு
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேச பெருமாள் என்பது தெரியவந்தது. ரோகிணி தியேட்டரில் பிளம்பராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 26ஆம் தேதி மதுபோதையில் பணிக்கு வந்துள்ளார்.
அடுத்த நாள் முதல் பணிக்கு வரவில்லை
அதற்கு அடுத்த நாள் முதல் இவர் பணிக்கு வராதது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. வெங்கடேச பெருமாள் மது போதையில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துவிட்டாரா என விசாரணை நடத்தப்படுகிறது. வேறு காரணங்களுக்காக அவராகவே தற்கொலை செய்து கொண்டாரா, இல்லை யாராவது அவரை ஏதாவது செய்துவிட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
தண்ணீர் தொட்டி
எதற்காக அவர் தண்ணீர் தொட்டி அருகே சென்றார் என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்தவர் குறித்து சக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தால் மட்டுமே உண்மை நிலை தெரியவரும் என போலீஸார் கூறுகிறார்கள். சென்னை கோயம்பேட்டில் ரோகிணி தியேட்டர் மிகவும் பிரபலம். இந்த தியேட்டரில் புதுப்படம் ரிலீஸானால் அதை பார்க்க ஏராளமானோர் வருவர். மேலும் புதிய படத்தின் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என இந்த தியேட்டரில் முதல் நாள் காட்சியை பார்க்க வருகை தருவர். அந்த வகையில் அண்மையில் வலிமை படம் ரிலீஸான போது தயாரிப்பாளர் போனி கபூர் வந்திருந்தார்.
துணிவு படம்
இந்த தியேட்டரில் அண்மையில் துணிவு படம் ரிலீஸானது. இந்த படத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். அவர்களில் முதல் நாள் காட்சியின் நேரம் நெருங்க நெருங்க ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருந்தது. அந்த வகையில் லாரி மீது ஏறி நடனம் ஆடியபடி வந்த ரசிகர் பரத்குமார் கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 7நாட்களாக ஊழியர் ஒருவரின் சடலம் தண்ணீர் தொட்டியில் இருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தண்ணீரி தொட்டியின் தண்ணீரை கை, கால், முகம் கழுவவும் வாய் கொப்பளிக்கவும் பயன்படுத்திய ரசிகர்கள் தற்போது இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உள்ளனர்.