ஒருமையில் பேசவில்லை உரிமையில் பேசினார்! கேஎன் நேரு பொண்ணு மாதிரி பாத்துப்பார்! மேயர் பிரியா விளக்கம்
சென்னை : சென்னை மேயரை மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசுவதா என அமைச்சர் கே.என் நேரு மீது விமர்சனம் எழுந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேரு என்னை ஒருமையில் பேசவில்லை உரிமையில் பேசினார், என்னை மகள் போல் பார்த்து கொள்கிறார் என சென்னை மேயர் பிரியா ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நமது சென்னை நமது பெருமை என்ற பெயரில் சென்னை தினத்தை கொண்டாடும் விதமாக சென்னை பெரு மாநகராட்சி பள்ளிகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திமுகவினர், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை - சென்னையில் மழைக்கு வாய்ப்பு!
அமைச்சர் கே.என்.நேரு
முதலில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி நின்றால் ஒரே நாளில் அது அப்புறப்படுத்தப்படும் என்ற உறுதியையும் அளித்தார். இதனிடையே மழைநீர் வடிகால் பணிகளை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களை அழைத்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
ஒருமையில் பேசினாரா?
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டேயிருந்த அமைச்சர் கே.என்.நேரு, திடீரென 'ஏம்மா சொல்லும்மா' எனவும், இங்க வந்து நில்லுமா எனவும் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்கள் பரவி விமர்சனங்களை பெற்றது. ஒரு மேயரை மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசுவதா என அமைச்சர் கே.என் நேரு மீது விமர்சனம் எழுந்த நிலையில் சில இவ்வாறு பேசியது தவறு எனக் கூறினார்.
பிரியா என் மகள்
இதனிடையே இதுகுறித்து அமைச்சர் கே என் நேரு விளக்கம் அளித்தார். அதில் சென்னை மேயர் பிரியாவை வாம்மா போம்மா என பேசியது மகள் போன்ற அர்த்தத்தில் தான். பிரியா என்னை விட வயது மிகவும் குறைந்தவர். அவர் என் மகள் போல.. இதில் சாதி பாகுபாடும், ஆண் ஆதிக்கமும் கிடையாது. சிலர் இந்த வீடியோவை எடிட் செய்து வெளியிட்டு பரப்புகிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் மேயர் பிரியா என் மகள் மாதிரி. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை" என விளக்கம் அளித்து இருந்தார்.
மகள் போல் பார்த்துக் கொள்கிறார்
இந்நிலையில் அமைச்சர் நேரு என்னை ஒருமையில் பேசவில்லை உரிமையில் பேசினார், என்னை மகள் போல் பார்த்து கொள்கிறார் என சென்னை மேயர் பிரியா ராஜன் விளக்கம் அளித்துள்ளார். ஒரு பெண்ணுக்கு திமுக மூத்த அமைச்சர் கொடுக்கும் மரியாதை இதுதானா? மேயரை ஒருமையில் பேசலாமா?. மேயர் பட்டியலின பெண் என்பதால் தான் அமைச்சர் இப்படி நடந்து கொண்டாரா? என கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் மேயர் பிரியா இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.