அமித்ஷாவை சந்திக்க இருக்கும் முதல்வர் ஸ்டாலின்.. இதைப் பற்றி பேச வேண்டும்- ஆர்பி உதயகுமார் கோரிக்கை!
சென்னை : செப்டம்பர் 3ஆம் தேதி கேரளாவில் அமித்ஷா தலைமையில் நடைபெறும் தென் மண்டல கவுன்சில் கூட்டத்தின் போது காவிரி மற்றும் முல்லை பெரியாறு அணை பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் பேச வேண்டும் என ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக வரும் என ஆர்பி உதயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜனநாயகப் பாதையில் செயல்படும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஒன்றுபட்டு ஒரு மாபெரும் சக்தியாக உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கு
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இன்று நடக்கும் விசாரணையில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருதரப்பும் தங்களது தரப்பு வாதங்களை முன்வைக்க இருக்கின்றனர். பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வர உள்ளது என்பதுதான் அதிமுக தொண்டர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

வெளிப்படைத் தன்மையோடு
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. வெளிப்படைத் தன்மையோடு, தொண்டர்கள் தாமாக தன்னெழுச்சியாக முன்வந்து, பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று தீர்மானத்தை நிறைவேற்றி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

சாதகமாக வரும்
அந்த பொதுக்குழு செல்லாது என்ற உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். அந்த தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக வரும். ஜனநாயகப் பாதையில் செயல்படும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஒன்றுபட்டு ஒரு மாபெரும் சக்தியாக உருவாகும். மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்படும்" எனத் தெரிவித்தார்.

போஸ் கொடுக்கும் முதல்வர்
மேலும், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். திமுக தேர்தலின் போது ஏராளமான வாக்குறுதிகள் கொடுத்தது. ஆனால் தற்போது திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மாறாக புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் பணியிலேயே முதலமைச்சர் ஈடுபட்டு வருகிறார் எனத் தெரிவித்தார்.

அமித்ஷாவுடன் சந்திப்பு
மேலும் பேசிய அவர், "வரும் செப்டம்பர் 3ஆம் தேதி கேரளாவில் அமித்ஷா தலைமையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கிய தென் மண்டல குழுவின் 30 ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகின்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது காவிரி மற்றும் முல்லை பெரியாறு அணை பிரச்சனைகள் குறித்து முதல்வர் எடுத்துரைக்க வேண்டும் என அதிமுக சார்பாக கேட்டுக் கொள்கிறேன்" என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications