கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே.. மோதிக்கொண்ட மாணவர்கள்.. ரயில் நிலையங்களில் பரபரப்பு
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் கொரட்டூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன.
முதல் அலை குறைந்த போது, சில காலம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இருப்பினும், 2ஆம் அலை ஏற்பட்டதால், உடனடியாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன

கல்லூரி திறப்பு
இந்நிலையில், தற்போது கொரோனா 2ஆம் அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது. இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அரசு அறிவித்திருந்தது. அரசு உத்தரவின்படி இன்று (செப். 1) முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. பல மாதங்களுக்குப் பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்புகளுக்குச் சென்றனர்.

மாணவர்களுக்கு இடையே மோதல்
இந்நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல் நாளே சென்னையில் இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிய மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கு இரு கல்லூரி மாணவர்களும் நீண்ட நேரமாகக் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திடீர் பரபரப்பு
இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் மோதலில் ஈடுபட்ட இரு கல்லூரி மாணவர்களையும் விலக்கிவிட்டனர். பின்னர் ரயிலில் ஏறி வியாசர்பாடி ரயில் நிலையத்திற்குச் சென்ற அவர்கள். அங்கு மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் பயங்கர சத்தத்துடன் மோதிக் கொண்டதால் ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். அங்கிருந்து புறப்பட்ட மாணவர்கள் கொரட்டூர் ரயில் நிலையத்தில் இறங்கி மீண்டும் மோதலில் ஈடுபடத் தொடங்கினர்.
Recommended Video

கண்காணிப்பு பணிகள் தீவிரம்
இருப்பினும், விடாமல் துரத்திச் சென்ற ரயில்வே பாதுகாப்புப் படையினர் அங்கும் மாணவர்களின் மோதலை தடுத்து, அனைத்து மாணவர்களையும் ரயிலில் ஏற்றி அனுப்பினர். அதன் பின்னரே அங்கு அமைதி திரும்பியது. இதன் காரணமாக அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் ரயில் பயணிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,












Click it and Unblock the Notifications