ஒரு பக்கம் மம்தா.. மறுபக்கம் சோனியா.. ஸ்டாலினின் டெல்லி விசிட்டால் தேசிய அரசியலில் மாற்றம் வருமா?
சென்னை: 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை இரு மாபெரும் ஆளுமைகளை ஒரே அணியில் இணைத்து தேர்தலை சந்திக்கலாம் என வியூகம் வகுக்கும் முதல்வர் ஸ்டாலினின் முயற்சி எடுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டை போல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்பதற்காக இப்போது எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.
அந்த வகையில் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி என்ற பாதையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தெலுங்கானா முதல்வர் கே சி சந்திரசேகர் ராவும் முனைப்பு காட்டி வருகிறார்கள்.

3ஆவது அணி
இதே போல் காங்கிரஸை விட்டுவிட்டு 3-ஆவது அணியை உருவாக்குவதில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளையும் இணைப்பதிலும் மம்தா, ராவ் ஆகியோர் திட்டமிட்டு வருகிறார்கள். இதற்காக எதிர்க்கட்சி மாநில முதல்வர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.

சந்திப்பு கூட்டம்
அதற்கு முன்னதாக அத்தகைய ஒரு சந்திப்பு கூட்டம் முதல்வர் ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு அது நடக்கவில்லை. இந்த நிலையில் டெல்லியில் கட்டப்பட்ட திமுக அலுவலகத்திற்கு வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு சோனியா, ராகுல், மம்தா, பினராயி, சரத்பவார், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை
இந்த விழா எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை பாஜகவுக்கு எடுத்து காட்டும் வகையில் இருக்க வேண்டும் என்பது ஸ்டாலினின் எண்ணமாக உள்ளது. ஸ்டாலின் ஏற்பாடு செய்யும் அணியில் இரு ஜாம்பவான்களான மம்தாவையும் சோனியாவையும் இணைத்து காங்கிரஸ் தலைமையில் 2024 தேர்தலை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து கொண்டே வந்து தற்போது வெறும் இரு மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்கின்றன. அதிலும் கூட்டணி ஆட்சி. அப்படிப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலினோ காங்கிரஸ் கட்சியை விட்டுக் கொடுக்காமல் அந்த கட்சியின் தலைமையில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்கிறார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா
ஒரு பக்கம் மேற்கு வங்க முதல்வர் மம்தா தன் தலைமையில் எதிர்க்கட்சிகள் திரள வேண்டும் என கருதுகிறார். ஆனால் முதல்வர் ஸ்டாலினோ பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்த்து போட்டியிட்டு தேர்தலில் வெல்ல வேண்டும் என நினைக்கிறார்கள். இவர்கள் இருவரில் யாருடைய முயற்சி வெற்றியடையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications