ரூ.2500 பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் பொங்கல் பரிசாக ரூ. 2500 வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை: பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வரும் 2021 ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2.10 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்றும் இலங்கை தமிழர்களின் 18,923 அட்டைகளுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிச்சாமி பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை காலங்களில் அரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், வெல்லம் கொடுக்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.100 ரொக்கம் என பொங்கல் பரிசு திட்டத்தை அறிவித்தார் ஜெயலலிதா.
லோக்சபா தேர்தல் அதிமுக தனித்து போட்டியிட்டு அபரிமிதமான வெற்றி பெற்றது. இதனையடுத்து பொங்கல் பரிசுத்தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு வரை 1000 ரூபாயாக கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகை இந்த ஆண்டு 2500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்நாளிலேயே இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். 2.10 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்று தெரிவித்தார் முதல்வர் பழனிச்சாமி. சர்க்கரை அட்டை வைத்துள்ளவர்கள் அரிசி அட்டைகளாக மாற்றவும் அவகாசம் கொடுக்கப்பட்டதை அடுத்து மேலும் இரண்டரை லட்சம் பேர் அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஜனவரி 4ஆம் தேதி முதல் பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2.10 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்றும் இலங்கை தமிழர்களின் 18,923 அட்டைகளுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யக்கூடிய 3,75,235 சர்க்கரை அட்டைதாரர்களும் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் பழனிச்சாமி பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதேபோன்று ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
கொரோனா காலத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் 2500 ரூபாய் வழங்கியதற்காக தமிழக அரசுக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து ஜனவரி 4- ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் அரிசி அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளன.