"எல்லாத்தையும் ஓரம்கட்டிடுங்க".. 2 பேரை எடுத்துக்காட்டி.. ஸ்டிரிக்ட் உத்தரவு போட்ட முதல்வர் ஸ்டாலின்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு பின் முதல்வர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை போன் மூலமும், நேரிலும் பிறப்பித்து இருக்கிறாராம்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இமாலய வெற்றியை திமுக பெற்றுள்ளது. ஆளும் கட்சியின் வெற்றி என்றாலும் கூட எதிர்பார்த்ததை விட அதிக இடங்களை திமுக பெற்றுள்ளது. பெரும்பான்மையான நகராட்சி சேர்மேன், பேரூராட்சி சேர்மேன் பதவிகளையும் திமுகதான் கைப்பற்றி உள்ளது.
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணிதான் கைப்பற்றி உள்ளது.
952 மாநகராட்சி வார்டுகளை திமுக வென்றுள்ளது. 2360 நகராட்சி வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளது. அதேபோல் 4388 பேரூராட்சி வார்டுகளை திமுக மொத்தமாக கைப்பற்றி வென்றுள்ளது.
உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரையும் நானே நேரடியாக கண்காணிப்பேன்.. எச்சரிக்கும் முதல்வர் ஸ்டாலின்
மக்கள் நம்புகிறார்கள்
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி திமுக தரப்பை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறதாம். முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் கட்சி ரீதியாகவும், பர்சனலாகவும் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் வெற்றிக்கு பின் அறிவாலயத்திலும், பின்னர் தனது வீட்டிலும் முதல்வர் ஸ்டாலின் திமுக வெற்றி சந்தோசத்தை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்று ஹாட் டிரிக் வெற்றிகளை பெற்றதால் முதல்வர் ஸ்டாலின் மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறாராம்.
காப்பாற்ற வேண்டும்
இந்த வெற்றியை திமுக தரப்பு எதிர்பார்த்து இருந்தாலும் அதிமுக இவ்வளவு மோசமான தோல்வியை அடையும் என்று முதல்வர் ஸ்டாலின் நினைக்கவில்லையாம். எதிர்க்கட்சியே இல்லை என்ற அளவிற்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் செயல்பாடு இருந்துள்ளது. இதையடுத்து மக்கள் திமுக மீது வைத்திருக்கும் மதிப்பை கட்டி காக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கடைசியாக நிர்வாகிகளை சந்தித்த போது கூறி இருக்கிறார். தேர்தல் வெற்றிக்கு பின் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சில மாவட்ட செயலாளர்கள் சந்தித்தார்.
ஆலோசனை
அதேபோல் மார்ச் 4ம் தேதி நடக்க உள்ள மறைமுக தேர்தல் தொடர்பான ஆலோசனைகள், பரிந்துரைகளும் முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. இதற்காக சில நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். இப்படி முதல்வர் ஸ்டாலின் பேசும் நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எல்லோரிடமும் முக்கியமான சில அறிவுரைகளை வழங்கி வருகிறராம். கட்சியின் கண்டிப்பாக மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காக்க வேண்டும்.
ஹாட் டிரிக்
நம்மை நம்பி ஹாட் டிரிக் வெற்றி கொடுத்துள்ளனர். மாநகராட்சியில் நாம் பெற்ற பெரிய வெற்றிகளில் இது ஒன்று. வெற்றிபெற்றுவிட்டோம் என்று அசிரத்தையாக இருந்து விட கூடாது. உங்கள் ஏரியா பணிகளை சிறப்பாக செய்யுங்கள். மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி என்று அனைத்திலும் சிறப்பாக பணிகளை செய்யுங்கள். நாம் ஆளும் கட்சி என்பதால் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர்வதற்கு நீங்கள் பாதையாக இருக்க வேண்டும். எந்த கம்பிளைண்டும் வர கூடாது என்று கூறி இருக்கிறாராம்.
ஆனால் உட்கட்சி மோதல்
அதேபோல் நகர்புற உள்ளாட்சி தேர்தலின் போது சில மாவட்டங்களில் உட்கட்சி மோதல் இருந்தது. 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மொத்தமாக திமுகவையே எதிர்த்து தனியாக போட்டியிட்டனர்.இது போல இனி நடக்க கூடாது. உட்கட்சி மோதல் இருந்தால் முறையாக தலைமையிடம் பேச வேண்டும். இப்போது பதவிக்கு வந்த பின் கட்சி பூசலை வைத்து பாகுபாடு காட்ட கூடாது. கீழே சின்ன விஷயம் நடந்தாலும் எதிர்க்கட்சி பெரிதாகிவிடும் என்று ஸ்டிரிக்ட் உத்தரவு பிறப்பித்து இருக்கிறாராம்.
2 பேர் எடுத்துக்காட்டு
தேர்தல் நேரத்தில் வந்த புகார்களை வைத்து முதல்வர் ஸ்டாலின் இந்த கண்டிப்பான உத்தரவை பிறப்பித்து இருக்கிறாராம். அதோடு கோவையில் செந்தில் பாலாஜி, சேலத்தில் கே என் நேரு ஆகியோரின் தேர்தல் பணிகளை குறிப்பிட்டு, அவங்க ரெண்டு பேரும் வேறு மாவட்டம். ஆனாலும் அவங்க பக்கத்துக்கு மாவட்டத்தில் வேலை பார்த்து வெற்றி பெற்றுள்ளனர். அப்படித்தான் நிர்வாகிகளை அனுசரித்து செல்லும், நிர்வாகிகளுடன் ஒற்றுமையாக செல்லும் குணம் இருக்க வேண்டும் என்று பாராட்டி இருக்கிறாராம்.
எல்லா மாநகராட்சியும் நாம்தான்
இப்போது எல்லா மாநகராட்சியும் நாம்தான். திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு போய் சேரணும். இடையில் தொகையை எடுப்பது, திட்டங்களை சரியாக செய்யாமல் இருப்பது போன்ற வேலைகள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சிக்கு அவப்பெயர் வந்துவிட கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறாராம். ஆனாலும் இந்த தேர்தலில் நல்ல வெற்றிபெற்ற காரணத்தால் நிர்வாகிகளின் பதவிகளில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று அறிவாலய தரப்பு தெரிவித்துள்ளது.