நியூஸ் பார்த்தீங்களா.. சட்டசபையில் புள்ளி விவரங்களை அடுக்கிய முதல்வர் ஸ்டாலின்.. பரபரப்பு பேச்சு!
சென்னை: தமிழ்நாட்டில் அந்நிய முதலீடு எந்த அளவிற்கு உள்ளது, தொழில்துறையில் செய்யப்பட்ட முதலீடுகள் மூலம் எவ்வளவு பயன் ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று தொழில் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து வருகிறார்.
முன்னதாக அதிமுக உறுப்பினர்களின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அதிமுக ஆட்சி காலத்தில்தான் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பேச்சு
முதல்வர் ஸ்டாலின் தனது உரையில், 10 வருஷமாக நடக்காத விஷயங்களை நாங்கள் 10 மாதத்தில் நடத்தி இருக்கிறோம். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது அதிமுக ஆட்சி காலத்தில் முதலீடுகள் எப்படி வந்தன. உலக முதலீட்டாளர்கள் மாநாடு எப்படி நடைபெற்றது. வெளிநாட்டு முதலீடுகள் எப்படி தமிழ்நாட்டில் குவிந்தது என்று குறிப்பிட்டனர். அதேபோல் தற்போது எதிர்கட்சித் தலைவராக இருப்பவரின் ஆட்சி காலத்தில் எவ்வளவு முதலீடுகள் கொண்டு வரப்பட்டது என்றும் அதிமுகவினர் பேசினார்கள்.
தங்கம் தென்னரசு பதில்
அதற்கு எல்லாம் அமைச்சர் தங்கம் தென்னரசு இடை இடையே எழுந்து பதில் சொல்லாமல், எதிர்க்கட்சியினர் பேசி முடித்த பின் மொத்தமாக பதில் சொல்ல தங்கம் தென்னரசு தயாராக இருக்கிறார். இருந்தாலும் முதலீட்டாளர்களை சந்திக்க நான் வெளிநாடு சென்ற காரணத்தால், எனக்கும் அதில் பங்கு உண்டு என்பதால், அந்த உணர்வோடு சில விளக்கங்களை இந்த அவைக்கு நானும் எடுத்து வைக்க விரும்புகிறேன்.
தொழில்துறை
தொழித்துறையை பொறுத்தவரை தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றுக்கொண்டதில் இருந்து புதிய முதலீடுகளை பெறுவதற்கான ஓப்பந்தங்களை போட்டு வருகிறோம். ஆட்சிக்கு வந்து 10 மாதங்களில் 131 ஒப்பந்தங்களை போட்டு உள்ளோம். 69375 கோடி முதலீட்டை ஈர்த்து இருக்கிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதால் எல்லாம் முடிந்துவிடும் என்றும் சொல்ல முடியாது.
எத்தனை ஒப்பந்தம்
புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் கிடைக்குமா என்பதை ஆய்வு செய்து வருகிறோம். இதை தீவிரமாக கவனித்து வருகிறோம். இந்த ஒப்பந்தங்களில் பல ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்து உள்ளது. புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்று கூட பிரபல பத்திரிக்கை ஒன்றின் தலையங்கத்தில், தமிழ்நாட்டில் குவியும் அந்நிய முதலீடுகள் என்று செய்தி போடப்பட்டுள்ளது. அதை படித்தீர்களா..
அந்நிய முதலீடு
அதேபோல் ஆங்கில நாளேடு ஒன்றிலும் அந்நிய முதலீடுகளை ஈர்க்க கூடிய தமிழ்நாடு என்றும் பாராட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கடந்த 10 மாதங்களில் 41 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தேசிய அளவில் முதலீடு 16 சதவிகிதம் வீழ்ந்துள்ள நிலையில்தான் நாம் இந்த வளர்ச்சியை அடைந்து உள்ளோம். தேசிய மொத்த அந்நிய முதலீட்டில் தமிழ்நாட்டின் பங்கு 4 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக் உயர்ந்துள்ளது.
guindance தமிழ்நாடு
guindance தமிழ்நாடு ஆசியா - ஓசியானியா பகுதியில் சிறந்த முதலீடு ஊக்குவிப்பு மையம் என்ற சர்வதேச விருதை பெற்றுள்ளது. அமெரிக்கா தூதரகம் தமிழ்நாட்டை பாராட்டி உள்ளது. தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிர்வாகிகளுக்கு இந்த பெருமை சேரும். அவர்களை பாராட்டுகிறேன். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததால் தொழில் வரும். அதை மனதில் வைத்ததே நாங்கள் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். அதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.