முதல்வரான கணவர்... நேர்த்திக்கடனை செலுத்த காசி யாத்திரை செல்லப்போகும் துர்கா ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் விரைவில் ஆன்மீக யாத்திரை செல்லப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. காசி, கேதார்நாத் போன்ற ஆலயங்களுக்கு சென்று ஆலய தரிசனம் செய்யப்போகிறாராம் துர்கா.
சென்னை: திருப்பதி, திருவண்ணாமலை, திருச்செந்தூர் ஆலயங்களுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தியுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி வட இந்தியாவில் உள்ள பிரபல ஆலயங்களுக்கு ஆன்மீக யாத்திரை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர் துர்கா ஸ்டாலின். தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்டாலின் செல்லும் போது உடன் செல்லும் துர்கா அங்குள்ள பிரபல ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வருவார். சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று கணவர் முதல்வராக வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே கோவில் கோவிலாக சென்று வேண்டுதல் வைத்திருந்தார்.
எங்களது குடும்பம் பகுத்தறிவு குடும்பமாக இருந்தாலும்கூட சாமி வழிபாடு செய்வதை எங்கள் குடும்பத்தில் எவரும் தடுப்பதில்லை" என்று ஏற்கனவே கூறியிருக்கிறார். அதன் காரணமாகவே கோவில் கோவிலாக சென்று வேண்டுதல் வைத்திருந்தார் துர்கா.

நிறைவேறிய வேண்டுதல்
திருவண்ணாமலைக்கு சென்று பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்து வழிபட்டார் துர்கா. துர்கா ஸ்டாலினின் நம்பிக்கையும் வேண்டுதலும் நிறைவேறி விட்டது. சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராகி விட்டார். கணவர் முதல்வராக பதவியேற்றதை கண்களில் நீர் கசிய பார்த்து ரசித்தார் துர்கா ஸ்டாலின்.

துர்கா வேண்டுதல்
இறைவனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உடன் திருவண்ணாமலை சென்று வேண்டுதலை நிறைவேற்றினார். இரு தினங்களுக்கு முன்பு திருச்செந்தூருக்கு சென்று சுப்ரமணியசுவாமியை வழிபட்டார். சண்முகர், வள்ளி தெய்வானையை வழிபட்டார் துர்கா ஸ்டாலின். திருச்செந்தூருக்கு துர்கா சாமி தரிசனம் செய்ய வந்திருந்த போது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனும் சந்தித்து பேசினார்.

கோவில் கட்டும் துர்கா
திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்காக விரைவில் கட்டடம் கட்டித்தரப்போகிறார் துர்கா ஸ்டாலின். இதற்காக இடமும் பார்த்திக்கிறாராம். இதைத் தவிர பெருமாள் பக்தையான துர்கா கோவிலும் கட்டப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பெருமாள் சிலை செய்யவும் ஆர்டர் கொடுத்திருக்கிறாராம்.

அங்காளம்மன் கோவில்
இதைத்தவிர சொந்த ஊரில் கோவிலும் கட்டி வருகிறார். மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு ஊரை சேர்ந்தவர்தான் துர்கா.. இவரது குலதெய்வ கோயிலான பூம்பூகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் ஆலயத்தை புதுப்பித்து கட்டி வருகிறார் துர்கா ஸ்டாலின்.

காசி யாத்திரை
தமிழக ஆலயங்களில் நேர்த்திக்கடன் செலுத்திய பின்னர் விரைவில் காசி, கேதார்நாத் போன்ற ஆலயங்களுக்கு சென்று நேர்த்திக்டன் செலுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவினர்களுடன் காசி சென்றிருந்தார். காசிக்கு சென்று விட்டு வருமாறு குடும்ப ஜோசியர் கூறியதைக் கேட்டுத்தான் அப்போது சென்றிருந்தார் துர்கா. அப்போது, துர்கா ஸ்டாலினுடன் அவருடைய அக்கா பார்வதி, தங்கை ஜெயந்தி மற்றும் பார்வதியின் கணவர் உள்பட குடும்ப உறவினர்களுடன் காசி சென்றவர் காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு வேண்டுதல் வைத்து விட்டு வந்தார்.

சிவ தரிசனம் செய்யப்போகும் துர்கா
அவரது வேண்டுதல் இப்போது நிறைவேறியிருப்பதால் மீண்டும் காசி சென்று வேண்டுதலை நிறைவேற்றப் போகிறாராம். கேதார்நாத் சிவ ஆலயம், நேபாளம் பசுபதிநாதர் ஆலயங்களுக்கும் சென்று நேர்த்திக்கடன் செலுத்தப்போகிறாராம் துர்கா ஸ்டாலின். வெகு விரைவில் வட மாநிலங்களுக்கு ஆன்மீக தரிசனம் செல்லப்போகிறார் துர்கா.












Click it and Unblock the Notifications