கோவை கார் வெடிப்பு.. என்ஐஏ சுறுசுறுப்பு.. விசாரணை அதிகாரி நியமனம்..யாரு? கோர்ட்டும் அதிரடி மாற்றம்
சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கு என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. என்ஐஏ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்படி விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதோடு, வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் சென்ற கார் திடீரென்று வெடித்து சிதறியது.
காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காரிலேயே இறந்த நபரின் பெயர் ஜமேஷா முபின் என்பது தெரியவந்தது. மேலும் 2019ல் அவரிடம் என்ஐஏ விசாரித்ததும் தெரியவந்தது.

5 பேர் அதிரடி கைது
இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதோடு சதிச்செயல்கள் ஏதேனும் இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். டிஜிபி சைலேந்திரபாபு உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக உக்கடம் முகமது தல்கா, முகமது அசாருதீன், ஜிஎம் நகர் முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்டவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது.

சிறையில் அடைப்பு
இவர்களை கோவை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இன்று விசாரணைக்கான காலம் முடிந்த நிலையில் 5 பேரையும் போலீசார் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதையடுத்து 5 பேரையும் நவம்பர் 8 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வழக்கு தொடர்பாக அப்சர் கான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 6 பேரும் சிறையில் உள்ளனர்.

என்ஐஏ விசாரணை துவக்கம்
இதற்கிடையே தான் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார். அதன்படி தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பின் முதல் தகவல் அறிக்கையும் வெளியானது. இதில் ஜமேஷா முபினுக்கு செநா்தமான இடங்களில் வெடிப்பொருட்கள் உள்ளிட்ட 109 பொருட்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ஐஏ சுறுசுறுப்பு
இந்த சம்பவம் தொடர்பாக தகவல்களை சேகரிக்க என்ஐஏ டிஐஜி வந்தனா, எஸ்பி ஸ்ரீஜித் தலைமையிலான என்ஐஏ குழுவினர் கோவைக்கு வந்தனர். இவர்கள் கோவை மாநகர காவல்துறையினர் உயரதிகாரிகளை சந்தித்து சில விபரங்களை பெற்றனர். இதையடுத்து தான் என்ஐஏ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் விரைவில் என்ஐஏ தீவிர விசாரணையை துவங்க உள்ளது. இந்த வழக்கில் என்ஐஏ சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என என்ஐஏ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் வழக்கு தொடர்பாக அடுத்தடுத்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணை அதிகாரி நியமனம்
அதன்படி கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் என்ஐஏ விசாரணை அதிகாரி நியமனம் செய்துள்ளது. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தலைமையிலான குழு விசாரணையை துவங்க உள்ளது. இந்த விசாரணையின்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரையும் காவலில் எடுத்து என்ஐஏ விசாரிக்க உள்ளது.

நீதிமன்றம் மாற்றம்
இதற்கு ஏற்ப கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு விசாரணையை சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை நீதிமன்றம் கோரியுள்ளது. பூந்தமல்லியில் என்ஐஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உள்ளதால் தான் வழக்கு இங்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுபொதுவான நடைமுறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications