வைகை புயல் வடிவேலு.. வம்பு அரசியலுக்கு போய் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்ட மாபெரும் கலைஞன்!
சென்னை: வைகை புயல் வடிவேலுவின் 62-வது பிறந்த நாள் இன்று.. தமிழ் சினிமாவில் முகத்தைக் காட்டியே முச்சூடும் சிரிக்க வைத்த மகா கலைஞன் வம்பு அரசியல் வலையில் சிக்கி சின்னாபின்னமானது ஒரு தொயரம்தான்!
என் ராசாவின் மனசிலேவில் பயணத்தைத் தொடங்கிய வைகை புயல் வடிவேலு, அன்று திரை உலகில் கொடி கட்டிப் பறந்த கவுண்டமணி- செந்தில் இணையருக்கு சவாலாக இருப்பார் என யாரும் எதிர்பார்த்தது இல்லைதான்.. இன்றைய தலைமுறையின் நகைச்சுவை உணர்வின் அத்தனை அம்சங்களும் வடிவேலுவின் கதாபாத்திரங்களாலும் வசனங்களும் கட்டமைக்கப்பட்டுவிட்டன. இன்று காமெடி என்றால் அதில் வடிவேலுவின் வசனங்கள் இல்லாமல் இருப்பதும் இல்லை.
தமிழ் பையனுக்காக போலந்தில் இருந்து வந்த பெண்.. சென்னையில் டும் டும்.. சுவாரசிய காதல் திருமணம்
விஜயகாந்துடன் மோதல்
இப்படி சுமார் 20 ஆண்டுகள் இடைவிடாத ஓயாத உழைப்பால் தனி முத்திரை பதித்துக் கொண்ட நகைச்சுவை திலகம் வடிவேலு சர்ச்சைகளில் சிக்கி சிதைந்து போனது பரிதாபத்துக்குரியதுதான்! விஜயகாந்துடன் 2008-ல் சிறு மோதலாக தொடங்கிய விவகாரம், வடிவேலுக்கு திரைத் துறையில் எண்ட் கார்டு போட வைக்கும் என அவரே எதிர்பார்த்திருக்கமாட்டார்.
அரசியலில் வடிவேலு
காலச்சக்கரம் சுழல விஜயகாந்த் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்தார்.. அவருக்கு எதிராக ஆலமர கட்சியான திமுக்கு வடிவேல் எனும் நகைச்சுவை நாயகன் தேவைப்பட்டார். 2011 சட்டசபை தேர்தலில் வடிவேலுதான் திமுகவின் பிரசார பீரங்க.. சிங்கமென கர்ஜிக்கும் சிம்மக் குரலோன்களால், அடுக்குமொழிகளால் அசரவைத்த அண்ணாவின் தம்பிகளால், கரகர குரல் கருணாநிதிகளால் பெருமரமாய் விருட்சமாய் நின்ற திமுகவுக்கு காமெடி வடிவேலு ஆயுதமாக தேவைப்பட்டார் என்பதை எப்படி சொல்ல?
தீவிர பிரசாரம்
2011 தேர்தலில் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் வடிவேலு பிரசாரம் செய்தார். அவரது ஒற்றை இலக்கு விஜயகாந்த் மட்டும்தான்.. திமுகவின் மூன்றாம் தர பேச்சாளர்கள் பயிற்சி எடுக்க வேண்டிய நிலையை வடிவேலு உருவாக்கி வைத்திருந்தார். அன்று திமுகவின் பிரசார பலமாக சன் டிவி இருந்தது. இதனால் வடிவேலுவின் பேச்சும் பிரசாரமும் இடைவிடாமல் ஒளிபரப்பாகி கொண்டே இருந்தது.
மீண்டு வரட்டும்
தெகட்ட தெகட்ட வடிவேலுவின் பிரசாரம் திணிக்கப்பட்டதாலே என்னவோ, திமுக ஆகப் பெரும் தோல்வியை அந்த தேர்தலில் எதிர்கொண்டது. வேலு கால் வைத்த இடம் இப்படியாகிப் போனதே என எதிர் விமர்சனங்கள், ஏகடியங்கள் எல்லா திசைகளிலும் சரமாரியாகவந்து விழுந்தன.
அன்றோடு தமது அரசியல் ஆசைக்கு முடிவு கட்டிக் கொண்டார் வடிவேலு. ஆனால் அவரது இந்த வாய் துடுக்குத்தனங்கள், அறியப்படாத சிலபல நடவடிக்கைகள், அவரது திரைப் பயணத்தில் முட்டுக்கட்டையாக பெரும் பாறாங்கல்லாக விழுந்தது. சுமார் 10 ஆண்டுகள் அவரால் திரையில் தலைகாட்டவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இப்போதும் அவரது முந்தைய காமெடிகள்தான் கொடி கட்டிப் பறக்கின்றன. அன்று விழுந்த அடியில் இருந்து அந்த மாபெரும் கலைஞன் மீண்டும் எழவே முடியவில்லை.. இந்த இனிய பிறந்த நாளில் இருந்தாவது அந்த நகைச்சுவை புயலுக்கு வசந்த காலம் பிறக்கட்டும் என ஒரு ரசிகனாக வாழ்த்துவோம்!