நல்லாயிருக்கே உங்க நியாயம்.. கம்பெனிகளுக்கு கடன் தள்ளுபடி.. விவசாயிகளுக்கு வட்டிக்கு வட்டி..? -காங்.
சென்னை: கார்ப்பரேட்களின் கடனை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு விவசாயிகளிடம் மட்டும் வட்டிக்கு வட்டி வசூலிப்பது ஏன் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வினவியுள்ளார்.
மத்திய அரசு விவசாயிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விட்டதாக அவர் வேதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

வட்டிக்கு வட்டி
ரூபாய் 2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதை தொடர்ந்து மத்திய நிதியமைச்சகம் சில சலுகைகளை கேள்வி பதில் பாணியில் கடந்த 26 ம் தேதி வெளியிட்டது. அதில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வேளாண் கடன் திட்டத்தின் கீழ் பயிர், டிராக்டர் கடன் பெற்றவர்கள் மற்றும் விவசாய கடன் பெற்றவர்கள் வட்டிக்கு வட்டி சலுகைக்கு தகுதியான எட்டு பிரிவுகளின் கீழ் வரமாட்டார்கள். எனவே, பயிர், டிராக்டர் கடன் உள்ளிட்ட வேளாண் கடன்கள் வட்டிக்கு வட்டி ரத்து சலுகை பொருந்தாது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

விவசாயிகள் இன்னல்
சிறு, குறு தொழில் நிறுவன கடன், கல்விக்கடன்கள், வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன் ஆகியவற்றின் வட்டிக்கு வட்டி ரத்து வழங்கப்பட்ட திட்டத்தில் விவசாய கடன்களை மத்திய அரசு சேர்க்காமல் விட்டுவிட்டது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. ஏற்கனவே, கடுமையான கடன் தொல்லை காரணமாக கடும் இன்னலில் சிக்கியுள்ள விவசாயிகள் மத்திய அரசின் அறிவிப்பால் கடும் சோதனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

அபராத வட்டி
விவசாயிகளின் கடனை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை பரிவுடன் கவனிக்காத மத்திய அரசு கார்ப்பரேட் கடன்களை ரத்து செய்திருக்கிறது. விவசாயிகள் கடனை ரத்துசெய்யாவிட்டாலும், கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஆறு மாத காலத்திற்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும். வட்டிக்கு அபராத வட்டி விதிப்பதையும் நிறுத்தவேண்டும். பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி நிதி ஆதாரத்தை திரட்டி விவசாயிகளுக்கான கடனுக்குரிய வட்டியை ரத்து செய்யவேண்டும்.

காங். எச்சரிக்கை
வேளாண் சட்டங்களை எதிர்த்து கொழுந்து விட்டு எரியும் போராட்ட சூழலில் விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வட்டியையும் அபராத வட்டியையும் உடனடியாக தள்ளுபடி செய்யவேண்டும். அப்படி தள்ளுபடி செய்யப்படவில்லையெனில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்க விரும்புகிறேன்.












Click it and Unblock the Notifications