ரணகளமாகிப் போன சென்னை காங். தலைமை அலுவலகம்.. நிர்வாகிகள் கோஷ்டி மோதலால் போலீஸ் குவிப்பு
சென்னை: சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு பலர் படுகாயமடைந்ததால் போலீசார் பெருமளவு குவிக்கப்பட்டனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்களுக்கு பஞ்சம் இருந்ததே இல்லை. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அத்தனை முன்னாள் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் அனைவருமே ஒவ்வொரு கோஷ்டியை வளர்த்து வைத்துள்ளனர்.
இந்த கோஷ்டி பூசலால் தமிழகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை எங்கு நடைபெற்றாலும் அமளி துமளி, அடிதடி இயல்பான ஒன்றாகிவிட்டது. அக்கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனும் எத்தனையோ ரணகள காட்சிகளை எதிர்கொண்டிருக்கிறது.

குடும்பிடி சண்டை- அடிதடி
காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவிப்பு, வேட்பாளர்கள் அறிவிப்பு, பொறுப்பாளர்கள் அறிவிப்பு என ஏதேனும் ஒன்று நிகழ்ந்தாலும் போதும்.. சென்னை சத்தியமூர்த்தி பவனில் உச்சகட்ட அடிதடி நடப்பது வழக்கம். 5 ஆண்டுகளுக்கு மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் குடுமிபிடி சண்டை போட்டு புரண்டு எழுந்த நிகழ்வுகளையும் பார்த்திருக்கிறது சத்தியமூர்த்தி பவன்.

சத்தியமூர்த்தி பவனில் கிழியாத வேஷ்டி சட்டையா?
சண்டையில் கிழியாத வேஷ்டி சட்டையா? என்ற சொலவடை மாறிப் போய் சத்தியமூர்த்தி பவனில் கிழியாத வேஷ்டி சட்டையா என்ற ரேஞ்சுக்கு பில்டப்பாகி வரலாற்றில் இடம் பிடித்துவிட்டது. ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரின் கோஷ்டியும் இன்னொரு தலைவரின் கோஷ்டியை பரம வைரியாகத்தான் பார்ப்பது வழக்கம். இத்தகைய அமளி துமளி, வேஷ்டி சட்டை கிழிப்பை எந்த ஒரு காங்கிரஸ் மேலிடத்தாலும் தடுக்க முடியாமல் போனது.

மீண்டும் அடிதடி
இதன் தொடர்ச்சியாக சத்தியமூர்த்தி பவனில் இன்று மீண்டும் மோதல் நடைபெற்றது. நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியை எதிர்கோஷ்டியினர் முற்றுகையிட்டனர். இம்முற்றுகையானது பெரும் மோதலானது.

ரத்த காயங்கள்
இதனைத் தொடர்ந்து நெல்லை ஜெயக்குமார் கோஷ்டியும் அவரது எதிர்கோஷ்டியும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் சத்தியமூர்த்தி பவன் ரணகளமாகிப் போனது. பலரது மூக்குகள் உடைந்து ரத்தம் சிந்திய நிலையில் அங்கும் இங்குமாக ஓடினர். இதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனுக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். தற்போது அங்கு அமைதி திரும்பினாலும் பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications