நாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி… 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்
சென்னை: தமிழகத்திற்கு நாளை வரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நான்கு பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் வருகிற 16ம் தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. எனவே, அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி நேற்று முன்தினம் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். மேலும் அவர் வருகிற 13 ம் தேதி காலை ராமநாதபுரத்திலும் அன்றைய தினம் மாலை தேனியிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார்.
பொன்னுத்தாய்க்கு 25 வயதே பூர்த்தியாகவில்லை.. வேட்புமனு ஏற்கப்பட்டு சின்னமும் ஒதுக்கப்பட்டுவிட்டதே!
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை தமிழகம் வர உள்ளார். கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு ஊர்களில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்.
இதற்காக அவர் பெங்களூரில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகிரி வருகிறார். இதற்கிடையே, தேர்தலுக்காக, 'தேசம் காக்கும் கை' என்ற தலைப்பில் காங்கிரஸ் பிரச்சார பாடலை, தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் முதல் கட்ட தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் 18ம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த மாதம் 13ம் தேதி சென்னை வந்த ராகுல் காந்தி, தனியார் மகளிர் கல்லூரியில் கலந்துரையாடினார். பின்னர், கன்னியாகுமரி சென்ற அவர் திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.