தமிழக காங். அடுத்த தலைவர் யார்? முக்கிய தலைகளிடம் 5 பேர் லிஸ்ட் வாங்கிய கார்கே.. எப்போது அறிவிப்பு?
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக யாரை நியமிக்கலாம் என தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே லிஸ்ட் கேட்டிருக்கிறாராம்.
கே.எஸ்.அழகிரியை தலைவர் பதவியில் இருந்து மாற்ற, முக்கிய தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அவரை மாற்ற தலைமையும் முடிவு செய்துள்ளது.
புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களிடம் காங்கிரஸ் தலைமை கருத்து கேட்டுள்ளது.
ஒவ்வொருவரிடமும் 5 பேர் கொண்ட பட்டியலை மல்லிகார்ஜுன கார்கே வாங்கி இருக்கிறாராம். குஜராத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தலைவர் அறிவிக்கப்படும் என்கிறார்கள்.
'கருணாநிதி காங்கிரஸ்’.. 2015ல் கோவை செல்வராஜ் கட்சி மாறியது இதற்குத்தான்.. இன்று அப்படியே 'பல்டி’!
மீண்டும் கிளம்பிய பூசல்
சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இரு கோஷ்டிகளைச் சேர்ந்தவர்களுக்கு இடையே கடந்த நவம்பர் 15-ம் தேதி கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக தலைமைக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்கள் மீண்டும் கடுமையாக கிளம்பி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேஆர் ராமசாமி vs குண்டு ராவ்
காங்கிரஸ் மோதல் தொடர்பாக, எம்.எல்.ஏ ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்த ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நடவடிக்கையை மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ரத்து செய்தார். இதனால் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கும், தினேஷ் குண்டுராவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. இதையடுத்து தினேஷ் குண்டுராவையும், ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமியையும் டெல்லி மேலிடம் நேரில் அழைத்து விளக்கம் கேட்டது குறிப்பிடத்தக்கது.
கேஎஸ் அழகிரி vs தலைவர்கள்
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநில தலைவர்கள் திருநாவுக்கரசர், இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் டெல்லிக்கே சென்று அழகிரியை மாற்றுமாறு கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலடியாக கேஎஸ் அழகிரி தரப்பினரும், அழகிரியை மாற்றக்கூடாது என்று கூறி செல்வப்பெருந்தகை, ரூபி மனோகரனுக்கு எதிராக புகார்களை அடுக்கினர்.
காங்கிரஸ் தலைமை முடிவு
கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சி 2019 லோக்சபா தேர்தலில் 9ல் போட்டியிட்டு 8 இடங்களிலும், 2021 மாநில சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதியில் போட்டியிட்டு 18 இடங்களிலும் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியைப் பெற்றதால், அவர் மீது காங்கிரஸ் தலைமை நல்ல அபிப்ராயத்தையே வைத்திருக்கிறது. எனினும், தமிழ்நாட்டில் இருந்து கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாலும், கே.எஸ்.அழகிரி தலைவராக நியமிக்கப்பட்டு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆவதாலும், அவரை மாற்ற தலைமை முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது.
போட்டி போடும் முக்கிய புள்ளிகள்
குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்ற அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. குஜராத் தேர்தல் காரணமாகவே காங்கிரஸ் நிர்வாகிகள் அமைதி காக்கிறார்களாம். தேர்தல் முடிந்தபிறகும், தலைமை மாற்றாவிட்டால் தங்கள் கட்சியின் மாநிலத் தலைவரை கண்டித்தே காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனராம். காங். தமிழக தலைவர் பதவிக்கு மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், ஜோதிமணி, விஜயதாரணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பலர் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
துடிப்பான ஆள்
இந்தநிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிறகு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அழைத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தியுள்ளார். அரைமணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் தலைவரின் செயல்பாடுகள் பற்றி கருத்து கேட்டுள்ளார். அடுத்து யாரை நியமிக்கலாம் என்றும் ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு, ப.சிதம்பரம் 'துடிப்பாக கட்சிக்கு வேலை செய்பவர்களாகப் பார்த்து நியமியுங்கள்' என்று ப.சிதம்பரம் கூறியதாக தகவல்கள் அடிபடுகின்றன.
மாற்றம் உறுதி
காங்கிரஸ் தலைவரை மாற்ற என்னதான் நெருக்கடி இருந்தாலும் ராகுல் காந்தியின் நடைபயணம் நடந்து வருவதால் பிப்ரவரி மாதத்துக்கு பிறகு தான் மாற்றம் இருக்கும் என்று பேசப்பட்டது. ஆனால் ஆந்திரா, பீகார் ஆகிய மாநில உட்கட்சி பிரச்சினைகளில் அந்த மாநில தலைவர்களை அதிரடியாக மாற்றி உள்ளார் மல்லிகார்ஜுன கார்கே. எனவே தமிழ்நாட்டிலும் மாற்றம் உறுதி என்கிறார்கள்.
5 பேர் லிஸ்ட்
ப.சிதம்பரம் மட்டுமல்லாது, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரிடமும், தங்களின் சாய்ஸாக 5 பேர் கொண்ட பட்டியலை தருமாறு ஒவ்வொருவரிடமும் கேட்டிருக்கிறாராம் கார்கே. ஒவ்வொருவரும் தங்களது ஆதரவாளர்களை பரிந்துரைத்து லிஸ்ட் அனுப்பி இருக்கிறார்களாம். அவர்கள் அளித்துள்ள பட்டியலின்படியும், மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைக்குப் பின்னரும் இந்த தலைமை மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள்.