பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு.. வாயில் வெள்ளை துணி கட்டி காங். இன்று தமிழ்நாடு முழுக்க போராட்டம்
சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்த உள்ளனர். மாநிலம் முழுக்க பல முக்கிய இடங்களில் இன்று காங்கிரஸ் கட்சியினர் சார்பாக வாயில் வெள்ளை துணி கட்டி அறப்போராட்டம் நடத்தப்பட உள்ளது.
Recommended Video
பெரும் போராட்டம் மற்றும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 31 வருடமாக சிறையில் இருந்த பேரறிவாளன் நேற்று விடுதலை ஆகியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் அவருக்கு பெயில் வழங்கிய நிலையில், நேற்று அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது. ஆளுநர் இந்த தீர்மானத்தில் மிக அதிக காலம் எடுத்ததாக கூறி கடுமையாக விமர்சனம் வைத்த உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியுடன் பேரறிவாளன் சந்திப்பு! தாய் அற்புதம்மாளுடன் சந்தித்து நன்றி தெரிவித்தார்..!
காங்கிரஸ் எதிர்ப்பு
இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்த உள்ளனர். மாநிலம் முழுக்க பல முக்கிய இடங்களில் இன்று காங்கிரஸ் கட்சியினர் சார்பாக வாயில் வெள்ளை துணி கட்டி அறப்போராட்டம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் கே எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொலை செய்தவர்கள் தமிழர்கள் என்பதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அறிக்கை
சிறையில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விடுதலை செய்ய சொல்லி ஏன் யாரும் குரல் எழுப்பவில்லை. அவர்கள் எல்லாம் தமிழர்கள் கிடையாதா?. பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வெள்ளை துணியால் வாயை கட்டிக்கொண்டு போராட்டம். முக்கியமான இடங்களில் காலை 10 - இரவு 11 மணி வரை அறப்போராட்டம் நடத்த முடிவு.
போராட்டம்
ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் மட்டும்தான் உங்களுக்கு தமிழர்களாக தெரிகிறார்களா. அவர்களை மட்டும்தான் விடுதலை செய்யும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?. தமிழ் உணர்வு என்று பேசும் நபர்கள்தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், மன உணர்வை வெளிப்படுத்தும் வகையிலும் நாங்கள் போராட உள்ளோம் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்து இருந்தார்.
காங்கிரஸ் அறிக்கை
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.
எங்கு போராட்டம் '
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம், என்று விமர்சனம் செய்து இருந்தது. மாவட்ட தலைநகரங்கள், முக்கிய இடங்களில் காங்கிரஸ் சார்பாக இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.