கொரோனாவால் நிறுத்தப்பட்ட சிறை கைதிகள் உறவினர்கள் நேர்காணல்.. 16 ஆம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்
சென்னை : கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சிறைக் கைதிகள் உறவினர்கள் நேர்க்காணல் 16 ஆம் தேதி முதல் மீண்டும் தொடக்கம் சிறைத்துறை அறிவித்துள்ளது
சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக சிறைகளில் COVID-19 கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 27.4.2021 சிறைவாசிகளுக்கு அவர்களின் உறவினர்களுடனான நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தம் முதல் செய்யப்பட்டிருந்தது.

அதற்கு பதிலாக வழக்கமான தொலைபேசி அழைப்புகளுடன், சிறைகளுக்கு ஆன்ட்ராய்டு கைப்பேசிகள் வழங்கப்பட்டு, சிறைவாசிகள் அவர்களின் உறவினர்களுடன் வீடியோ கால் செய்யவும், e-Mulakat வசதியின் வாயிலாக காணொலி மூலம் நேர்காணல் செய்யவும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
நேர்காணலை மீள தொடங்கக்கோரி சிறைவாசிகளின் உறவினர்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதையும், கொரோனா வைரஸ் பரவும் வீதம் படிப்படியாக குறைந்து வருவதையும், மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதையும், சிறைவாசிகளின் நலனை கருத்தில் கொண்டு, சிறைவாசிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனான நேரடி நேர்கானாலை 16.8.2021 முதல் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீள தொடங்குவது என சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப்பணிகள் துறையால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறைவாசிகளின் நேர்காணலின் போது பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைகள் குறித்த வழிமுறைகளை காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் சுனில் குமார் சிங் அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் வழங்கியுள்ளார்.
இதன்படி, சிறைவாசிகளை நேர்காணல் செய்ய விரும்பும் பார்வையாளர்கள் "e-Prisons Visitors Management System" அல்லது அந்தந்த சிறைகளின் தொலைபேசி மூலம் குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்பதிவு செய்ய வேண்டும் மற்றும் சிறைக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக வருகை தர வேண்டும். ஒரு சிறைவாசியை காண அதிகபட்சமாக இரண்டு பார்வையாளர்கள் மட்டுமே நேர்காணலின்போது அனுமதிக்கப்படுவர். ஒரு சிறைவாசிக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே நேர்காணல் அனுமதிக்கப்பட வேண்டும். சிறைவாசிகளை நேர்காணல் செய்ய விரும்பும் பார்வையாளர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ் (அல்லது) 72 மணி நேரத்திற்குள் கொரோனா RT-PCR பரிசோதனை செய்து தொற்று இல்லை என அளிக்கப்பட்ட சான்றிதழ் இவற்றுள் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து ஏனைய நாட்களில் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நேர்காணல் 15 நிமிடங்கள் அனுமதிக்கப்படும். உடல் வெப்பநிலை சோதனை, கைகளை சுத்தம் செய்த பிறகு பார்வையாளர்கள் முகக்கவசத்துடன் சிறையினுள் அனுமதிக்கப்படுவர்.
COVID-19 கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு நேர்காணலின்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், நேர்காணல் மனுக்கள் / உறுதிப்படிவம் ஆகியவற்றை சிறைத்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் http://prisons.tn.gov.in பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் நேர்காணல் மனுக்கள் இலவசமாக பாம்வையாளர்கள் அறையின் நுழைவாயிலில் வழங்கப்படும் தொலைபேசி எண்கள் மூலம் நேர்காணலுக்கான முன்பதிவை செய்து கொள்ளலாம்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications