முடங்கிய கால்நடை சந்தைகள்... ஊரக பொருளாதார நிலையை சிதைத்த கொரோனா லாக்டவுன்
சென்னை: நாடு முழுவதும் லாக்டவுன் உள்ளதால் கால்நடைச் சந்தைகள் முடங்கியதோடு ஊரகப்பகுதி பொருளாதார நிலை பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.
கால்நடைச் சந்தைகள் மூலம் வாரத்திற்கு பல கோடி ரூபாய் ஊரகப்பகுதிகளில் புழக்கத்தில் இருந்த நிலையில் அதனை புரட்டிப்போட்டுள்ளது இந்த கொரோனாவின் தாக்கம்.
இதனால் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் பெரும் துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், அதனை பராமரிக்கவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பிரபலம்
தமிழகத்தில் வாரம்தோறும் கால்நடைச் சந்தை நடைபெறும் இடங்களில் மணப்பாறை, உளுந்தூர்பேட்டை, வாழப்பாடி, காரியாபட்டி, காங்கேயம், நாட்ராம்பள்ளி உள்ளிட்ட சந்தைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. முழுக்க முழுக்க ஊரகப்பகுதிகளை உள்ளடக்கிய இந்த இடங்களில் நடைபெறும் சந்தைகள் ஒவ்வொன்றிலும் பல லட்சம் ரூபாய் வரை பணப்புழக்கம் இருக்கும். கறவை மாடுகள், கன்றுகுட்டிகள், ஆடு, கோழி என கால்நடைச் சந்தைகளில் விற்பனை செய்து அதன் மூலம் வருவாய் ஈட்டுபவர்கள் எண்ணிக்கையே தமிழகத்தில் லட்சங்களில் உண்டு.

கடும் பாதிப்பு
இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் லாக்டவுன் உள்ளதால் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் ஆடு, மாடுகளை விற்கவும் முடியாமல் அதற்கு தீனி தீவனங்கள் போட்டு பராமரிக்கவும் முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், லாக்டவுன் முடிந்த பின்னரும் கூட உடனடியாக ஆடு, மாடுகள் உரிய விலைக்கு விற்பனை ஆகுமா எனத் தெரியவில்லை என்றும் விவசாயிகளிடம் பணப்புழக்கம் இல்லாததால் யாரும் வாங்க முன்வரமாட்டார்கள் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

நாடு தழுவிய அளவில்
இந்த நிலை தமிழகத்தில் மட்டுமென்றால் இல்லை. நாடு முழுவதும் இதே பரிதாப நிலை தான் ஏற்பட்டுள்ளது. குதிரைச்சந்தை, ஒட்டகச்சந்தைகள் மூலம் வாரத்திற்கு பல கோடி ரூபாய் கைமாறும். குறிப்பாக உ.பி., ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த சந்தைகளை அதிகம் காணலாம். ஆனால் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் காரணமாக இந்த கால்நடைச் சந்தை தொழில் அடியோடு ஆட்டம் கண்டுள்ளன.

பராமரிப்பு நிதி
இதனிடையே நிலைமை சீரடைந்து கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்யும் வரை, அவைகளை பராமரிப்பதற்காக அரசு தரப்பில் ஏதேனும் உதவிகள் கிடைத்தால் தங்களுக்கு பேருதவியாக இருக்கும் எனக் கூறுகிறார் கால்நடை வளர்ப்பு விவசாயி தங்கராஜ். மேலும், கால்நடைச் சந்தைகளை நம்பி விற்பனையாளர்கள் மட்டுமல்லாமல் முகவர்கள், வேன் ஓட்டுநர்கள், என மறைமுகமாக ஆயிரக்கணக்கானோர் உள்ளதாகவும் அவர்களின் நிலைமையும் கவலையளிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications