இந்தியாவே ஆக்சிஜனுக்கு திணறும்போது .. சாதித்துக் காட்டிய தமிழகம்.. தட்டுப்பாட்டை தவிர்த்தது எப்படி?
சென்னை: கொரோனா பரவலின் இரண்டாம் அலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஆக்சின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதும், தமிழக சுகாதார துறையினரின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக மாநிலத்தில் அத்தியாவசிய மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிக மோசமான பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நாட்டிலேயே நீங்கதான் பெஸ்ட்.. தமிழகம், கேரளாவை புகழ்ந்து தள்ளும் வட மாநில சேனல்கள்.. ஏன் தெரியுமா?
இதனால் பல இடங்களிலும் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆக்சிஜன் தட்டுப்பாடும் நாட்டின் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 25 பேர் உயிரிழந்த அவல சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
ஆக்சிஜன் தேவை
நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும்போதும், தமிழகத்தில் மட்டும் ஆக்சிஜன் உள்ளிட்ட எந்த அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் தினசரி 400 மெட்ரிக் டன் வரை மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது தினசரி 240 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அதிகப்படியான ஆக்சிஜன் மாநிலம் முழுவதும் உள்ள 1200 மெட்ரிக் டன் வரையிலான சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள்
தமிழகத்தில் ஐநாக்ஸ் ஏர், பிராக்சேர் இந்தியா, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. இதில் ஐநாக்ஸ் ஏர் நிறுவனத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சேலத்தில் தொழிற்சாலைகள் உள்ளன. சேலத்தில் தொழிற்சாலைக்குத் தேவையான ஆக்சிஜனே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சேலத்திலும் திரவ மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மருத்து திரவ ஆக்சிஜன்
மருத்து திரவ ஆக்சிஜனை நேரடியாக நோயாளிகளுக்குக் கொடுக்க முடியாது. அதை அதிக அழுத்தத்தில் ஆவியாக்கிய பின்னரே, நோயாளிகளுக்கு அளிக்க முடியும். ஐநாக்ஸ் நிறுவனத்தால் 140 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடிந்தாலும்கூட, அந்நிறுவனத்தால் 11.5 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மட்டுமே கம்பிரஸ் செய்து நோயாளிகள்ககு வழங்கும் வகையில் மாற்ற முடியும். இது மட்டுமன்றி கேரளாவின் காஞ்சிகோட் என்ற பகுதியில் உற்பத்தி செய்யப்படும் திரவ ஆக்சிஜனும் கோவை, மதுரை போன்ற மாவட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது வரை தேவைக்கு ஏற்றபடியே திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தேவை அதிகரிக்கும்பட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தியையும் அதிகரிக்க முடியும் என ஐநாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் கொள்முதல்
இதேபோல பிராக்சேர் இந்தியா, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்ஸ் ஆகிய நிறுவனங்களும் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. இந்த மூன்று நிறுவனங்களைத் தவிர, தஞ்சை மற்றும் கோவை மாவட்டங்களில் அமைந்துள்ள மற்ற சில தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் ஆக்சிஜன் கொள்முதல் செய்யப்படுவதாகச் சுகாதார துறை தெரிவித்துள்ளது. அதேபோல புதுவையில் உற்பத்தி செய்யப்படும் 120 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.
கொள்ளளவு அதிகரிப்பு
கடந்த ஆண்டு கொரோனா பரவலின் முதல் அலையால் தமிழகம் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அப்போதே அடுத்த அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளைத் தமிழக சுகாதார துறை அதிகாரிகள் எடுக்கத் தொடங்கிவிட்டனர். மாநிலம் முழுவதும் சேமிப்பு இடங்களின் ஆக்சிஜன் சேமிப்பு இடங்களின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டன. திடீரென மாநிலத்தில் அவசர நிலை ஏற்படும்போது, அதைச் சமாளிக்கும் வகையில் ஆக்சிஜன் சேமிக்கும் திறன் அதிகப்படுத்தப்பட்டது.
ஆக்சிஜன் சேமிப்பு திறன்
தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பி உமநாத் ஐ.ஏ.எஸ் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறுகிய காலத்தில் சேமிப்பு திறன் 346 மெட்ரிக் டன்னில் இருந்து 882 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டது. அதேபோல மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சேமிப்பு கொள்ளளவு அதிகப்படுத்தப்பட்டது. சென்னையிலுள்ள ஓமந்தூரார் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சேமிப்பு திறன் அதிகப்படுத்தப்பட்டது.
அடுத்தகட்ட நடவடிக்கை
தமிழகத்தில் தற்போதுள்ள நிலை குறித்து சுகாதார துறை செயலர் .ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஆக்சிஜன் தேவையை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். தற்போது மாநிலத்தில் எவ்வித சிக்கலும் இல்லை. இருப்பினும், வரும் காலங்களில் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும்போது, நிலையைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை இப்போது எடுத்து வருகிறோம் என்றார். வரும் காலங்களில் தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து அதிகபட்சமாக, 450 மெட்ரிக் டன் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சம் பெரும்
தமிழ்நாட்டில் வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் சென்னையில் மட்டும் மே 15ஆம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு 19 ஆயிரமாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அப்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால், ஆக்சிஜன் தேவையும் பல மடங்கு உயரலாம் என அஞ்சப்படுகிறது.