"சூப்பர் அரசு".. நல்ல பேரெல்லாம் வேகமாக பெருகுது.. எடப்பாடியார், விஜயபாஸ்கருக்கு பாராட்டு குவியுது!
கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு தீவிர நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது
சென்னை: "சூப்பர் அரசு" என்ற பெயரை அதிமுக பெற்று வருகிறது.. அதற்கு காரணம், கொரோனா தடுப்பு விவகாரத்தில் எடப்பாடியார் எடுத்து வரும் சீரிய முயற்சிகளும், விஜயபாஸ்கர் வெளியிட்டு வரும் அதிரடி அறிவிப்புகளும்தான்!
தேர்தல் வரப் போகிறது.. அதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.. அதிமுகவை பொறுத்தவரை கடந்த வருடத்தில் இருந்தே டாப் கியர் போட்டு மேலே போனது.. ஆனால், கொரோனா பாதிப்பு வரவும் அப்படியே டவுன் ஆக ஆரம்பித்தது.
தினமும் சளைக்காமல் திமுக தலைவர் கேள்விகளால் துளைத்தெடுத்தார்.. அறிக்கையாக விட்டு திணறடித்தார்.. மிகப்பெரிய எரிச்சலையும், சறுக்கலையும் இது அதிமுகவுக்கு ஏற்படுத்தினாலும், மெல்ல மெல்ல அத்தனை அதிருப்திகளையும் உடைத்து கொண்டு மேலே வருகிறது.
2021-ல் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெற வியூகங்கள் வகுத்துவிட்டோம் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
சென்னை
தொற்று விவகாரம் என்பது நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கவே செய்யும் என்பதால், அதற்கான முன்முயற்சிகள், தடுப்பு நடவடிக்கைகள், சுகாதார பணிகள், என அத்தனை விஷயங்களையும் கையில் எடுத்துள்ளது. இதில் முதலில் பாராட்டத்தக்கது சென்னை சமாச்சாரம்தான்.. எங்கே சென்னையை தொலைத்துவிடுவோமோ என்று பயந்து கொண்டே இருந்தோம்.. குறுகிய காலத்தில் தொற்றில் இருந்து மீட்டு கொண்ட வந்துவிட்டது தமிழக அரசு!
சுகாதாரத்துறை
இந்நிலையில், விஜயபாஸ்கர் பழைய மாதிரியே வீரியத்துடன் செயல்பட்டு வருகிறார்.. சுகாதாரத்துறை என்பது மிகவும் பொறுப்பான பதவி.. உயிர் காக்கும் விஷயம்.. இயல்பான உயிர்பலி விழுந்தாலும் விஜயபாஸ்கரின் மண்டை உருளும் அளவுக்கு சென்றுவிடும் விவகாரம்!
கோவிஷீல்டு
இப்போது 2 நல்ல செய்தியை சொல்லி உள்ளார்.. முதலாவதாக, 3-வது கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு விரைவில் தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார்.. ஆக்ஸ்போர்டு பல்கலை. தயாரித்துள்ள "கோவிஷீல்டு" என்று பெயரிடப்பட்ட இந்த கொரோனா தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதிக்க முதல்வரும் உத்தரவு பிறப்பித்துள்ளார்... கோவிஷீல்டு எனப்படும் கரோனா தடுப்பூசி பல்வேறு நாடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சோதனை
இதை பற்றி விஜயபாஸ்கர் சொல்லும்போது, "இந்திய அளவில் தடுப்பூசியை சோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் சென்னையை தேர்வு செய்துள்ளது... இந்த ஆய்வு 18 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமான நபர்களிடம் மேற்கொள்ளப்படும்.
தடுப்பூசி
இந்த ஆராய்ச்சியை சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி கழகமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து மேற்கொள்ளும்... சென்னையை பொருத்தவரையில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும், போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியிலும் சுமார் 300 நபர்களிடம் செலுத்தி இந்த கோவிஷீல்டு தடுப்பூசி சோதனை நடத்தப்பட உள்ளது.
டி-செல்கள்
அதாவது, இந்த தடுப்பூசி டி செல்கள் என்று அழைக்கப்படும் வெள்ளை அணுக்களை 14 நாட்களில் மனித உடலில் உருவாக்கும்... இந்த வெள்ளை அணுக்கள் மனிதர்களின் உடலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செல்கள் மீது தாக்குதல் தொடுத்து உடனடியாக அதனை அழித்துவிடும். மேலும் 28 நாட்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலில் உருவாக்கி விடும்... 2ம் கட்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்து 3-ம் கட்ட ஆராய்ச்சியும் நடத்தப்பட்டு, பிறகு தடுப்புமருந்து பயன்பாட்டிற்கு வெகு விரைவில் கொண்டுவரப்படும்" என்றார். இந்த தடுப்பு மருந்து மட்டும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டால், நமக்கிருக்கும் பெரிய பிரச்சனையும், பீதியும் ஒழியும்!
மெசேஜ்
அடுத்ததாக, கொரோனா டெஸ்ட் முடிவுகளை இனி எஸ்எம்எஸ் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று விஜயபாஸ்கர் இன்று புதிய அறிவிப்பு சொல்லி உள்ளார்.. அத்துடன் இந்த நடைமுறையையும் இன்று அமைச்சரே தொடங்கியும் வைத்தார்.. இதனால் பொதுமக்களுக்கு தேவையில்லாத அலைச்சல் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்சிஜன்
அதுமட்டுமல்லாமல், எல்லா ஆஸ்பத்திரிகளிலும், போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளவாறு கண்காணித்து வருகிறார்... சில மாதங்களுக்கு முன்பு இந்த ஆக்சிஜன் இருப்பு இல்லாததால்தான் சில பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில், அந்த குறையும் தற்போது களையப்பட்டுள்ளது.
நகராட்சி
ஆனால், குரோம்பேட்டையில் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவரின் வீட்டுக் கதவு அடைக்கப் பட்டது தான் மக்களுக்கு அதிர்ச்சியை தந்துவிட்டது... ''பாதிக்கப்பட்டோரையும், பாதிக்கப்படாதோரையும் பாதுகாக்கவே இதுபோன்ற கட்டுப்பாடுகள் செயல்படுத்தப் படுகின்றன... அந்த வீட்டு வாசலை நாங்கள் முழுமையாக அடைக்கவில்லை" என்று நகராட்சி அதிகாரிகள் விளக்கம் சொன்னாலும், இதுபோன்ற குறைகளையும் மாநகராட்சி சார்பில் களைந்தால் நல்லா இருக்கும்.