முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை.. இலங்கையில் மட்டுமல்ல.. ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்கனவே தடை
சென்னை: இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலை அடுத்து இலங்கை அரசு முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை விதித்துள்ளது. இது ஒரு புறம் என்றால் இவ்வாறு முகத்தை மூடும் ஆடைகளுக்கு ஏற்கனவே பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ம் தேதி ஈஸ்டர் அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அங்கு முஸ்லிம் பெண்கள் புர்கா அணியத் தடை விதிக்கப்பட்டது. இலங்கையில் தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே பல்வேறு நாடுகளில் பெண்கள் புர்கா போன்ற முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஐரோப்பாவிலேயே பிரான்சில்தான் முஸ்லீம்கள் மிக அதிகமாக வசிக்கிறார்கள். அங்கு முஸ்லிம்களின் மக்கள் தொகை சுமார் 50 லட்சம். ஐரோப்பா கண்டத்தில் கடந்த 2010ம் ஆண்டில் முதன்முறையாக பிரான்ஸ் பொது இடங்களில் புர்காவுக்குத் தடை விதித்தது. அப்போது அதற்கெதிராக கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது.
இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த சதி.. அமெரிக்காவின் வார்னிங்கையாவது காதில் போட்டுக் கொள்ளுமா?
முழு உடலை மூடும் புர்க்காக்களை மட்டுமல்லாமல், முகத்தை மூடுவதோ அல்லது ஒரு தனி நபரின் அடையாளத்தை மறைக்கும், முகமூடிகள், பலக்ளாவாக்கள் , தலைக்கவசங்கள் அல்லது தலைமறைப்புகள் ஆகியவற்றை அணிவதோ கூட அங்கு தடை செய்யப்பட்டது இதற்கு பிரெஞ்சு செனட் ஏகமனதான ஆதரவுடன் வாக்களித்தது. இதனை வரவேற்ற பிரெஞ்சு அதிபர் நிக்கொலாஸ் சார்க்கோஸி, முகத்திரை பிரெஞ்சு மண்ணில் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
இந்த சட்டத்தின் மூலம் எந்த ஒரு மதச் சார்பையும் வெளிப்படுத்தும் குறியீடுகளையோ அல்லது உடைகளையோ அணிவது தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த புர்கா தடை சட்டத்தை மீறி புர்கா அணியும் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது 32,000 அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று அந்த சட்டம் கூறியது. இந்த சட்டத்திற்கு முஸ்லிம்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சட்டம் முஸ்லீம் பெண்களை இலக்கு வைப்பதாக கூறி 2014ல் இதற்கெதிராக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த சட்டத்தை அங்கீகரித்தது.
பெல்ஜியம்
கடந்த 2012ல் பெல்ஜியம் நாட்டில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்று கூறி அந்த நாட்டு அரசு பொது வெளியில் தனிப்பட்ட அடையாளங்களை மறைக்கும் எந்த ஒரு ஆடையையும் அணிய தடை விதித்தது.
டென்மார்க்
டென்மார்க் நாட்டில் 2018 ஆகஸ்ட் மாதம், பெண்கள் முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது. இது அந்த நாட்டு பெண்களை கடுமையான போராட்டங்களில் ஈடுபட வைத்தது. நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய பெண்கள் இதற்கு எதிராக போராடினர். இருந்தாலும் அரசு தனது கொள்கையில் தீவிரமாக இருந்தது. இந்த தடையின் காரணமாக முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிந்தால், 157 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும். இந்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்தால் அபராத தொகை பத்து மடங்கு உயரும். என்று அறிவிக்கப்பட்டது
நெதர்லாந்து
இந்த நாட்டில் 2007ம் ஆண்டு முதல் முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை முதலில் நாடு முழுமைக்கும் அமல் படுத்தப்படவில்லை. பின்னர் இத்தடையை , பொதுப் போக்குவரத்து, பல்கலைக்கழகங்கள் மற்றும் சில குறிப்பிட்ட தொழில்கள் என்று பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தப் பட்டது. நீதிமன்றத்தில் பணிபுரிபவர்கள் "அரச பக்கசார்பின்மை " என்ற அடிப்படையில் இது போன்ற ஆடைகளை அணியத் தடைவிதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு அவர்கள் தங்களது வேலைகளின் பொருட்டு பிறருடன் முகத்துக்கு முகம் உரையாட வேண்டிய தேவை இருந்தால், இந்த மாதிரியான ஆடைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டார்கள்.