எடப்பாடி பழனிசாமியையும் விசாரியுங்க.. உதவியாளர் மணி கைதான விவகாரம்.. செக் வைக்கும் இரா. முத்தரசன்
எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று இரா முத்தரசன் தெரிவித்துள்ளார்
சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமியையும் விசாரணை செய்ய வேண்டும் என்று இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.. இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு முத்தரசன் செய்தியாளர்களிடம் சொன்னதாவது: ஒன்றிய அரசு வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய போதும் சரி, திரும்ப பெறும் போது சரி, நாடாளுமன்றத்தில் எந்த விவாதங்களும் நடத்தாதது மோடியின்
சர்வாதிகார போக்கையே காட்டுகிறது. இது ஜனநாயக விரோத போக்கு.. பிரதமர் மோடி சர்வாதிகார போக்கை கைவிட வேண்டும்.

தமிழக முதல்வர்
வட கிழக்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக பெய்த நிலையில் தமிழக முதல்வரும், அமைச்சர்களும் களத்தில் இறங்கி செயல்படுவதும் உடனடியாக மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதும் பாராட்டுக்குரியது... மழையால் விவசாய நிலங்கள் பாதிப்பு குறித்து ஆராய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு அவர்கள் ஆய்வு செய்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தார்கள்..

நிவாரணம்
அதன்படி, மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்... அந்த அறிவிப்புக்கு பிறகு தாம் அதிக அளவு மழை பெய்தது... அதனால், முதலமைச்சர் நிவாரண அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மழையால் முழுமையாக பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

கால்நடைகள்
நிவாரண உதவிகள் அறிவிக்கும்போது ஹெக்டேரை கணக்கிட்டு தான் வழங்கப்படுகிறது.. எனவே, அதை மாற்றி ஏக்கரை கணக்கிட்டு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்... மழையின் காரணமாக உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும்... மழையின் காரணமாக உயிரிழந்த கால்நடைகளுக்கும் நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.

உரத்தட்டுப்பாடு
நோயால் இறந்த கால்நடைகளை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்கிற நடைமுறையை கைவிட வேண்டும். உரத்தட்டுப்பாடு அதிகம் இருக்கிறது.அதனால் வெளிசந்தைகளில் அதிக விலைக்கு உரம் விற்கப்படுகிறது. அதை தடுக்க நிபந்தனையற்ற முறையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரம் வழங்க வேண்டும்... குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் தேங்காயையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

திமுக கூட்டணி
திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஆர்ப்பாட்டங்கள் செய்கிறோமே தவிர எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை... வரும் 14ம் தேதி கூட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அந்த ஆர்ப்பாட்டமும் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தான்.. எங்கள் கூட்டணி கொள்கை கூட்டணி வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான கூட்டணி.. முதலமைச்சர் ஸ்டாலின் வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதில் உறுதியாக உள்ளார். நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் எங்கள் கூட்டணி இணைந்து போட்டியிடும்.

எடப்பாடி பழனிசாமி
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமியையும் விசாரணை செய்ய வேண்டும்... மழை பெய்யும் போது எந்த உதவி வேண்டுமானாலும் செய்யவும் தயார் என கூறும் பிரதமர் மோடி பாதிப்பு ஏற்பட்ட பின் நிவாரணம் கேட்டால் வாய் திறப்பதில்லை.
தமிழ்நாடு அரசு கேட்கும் நிவாரண தொகையை முழுமையாக ஜனநாயக அடிப்படையில் தர வேண்டும். மாற்றான் தாய் மனப்பான்மையில் ஒன்றிய அரசு செயல்பட கூடாது.

போராட்டம்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டியது ஒன்றிய அரசு தான்... ஆனால் பாஜக வினர் தமிழக அரசு விலையை குறைக்க வேண்டும் என போராடுகிறார்கள். பாஜகவினர் தமிழ்நாட்டில் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ளவே போராட்டம் நடத்துகிறார்கள். மக்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பது அவர்கள் நோக்கம் இல்லை.

வரி குறைப்பு
எண்ணெய் நிறுவனங்கள் தான் பெட்ரோல் விலையை தீர்மானிக்கின்றன என ஒன்றிய அரசு கூறியது.ஆனால் பல மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்த பின்பு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தன... அடுத்து வர உள்ள ஐந்து மாநில சட்டபேரவை தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் மீண்டும் வரியை குறைப்பார்கள்.. அதற்கு சில காலம் நாம் காத்திருக்க வேண்டும்" என்றார் முத்தரசன்












Click it and Unblock the Notifications