ஆரம்பிச்சிட்டோம்.. யார் மைனாரிட்டி பார்ட்னர்?.. முத்தரசனுக்கு வந்த கோபம்.. கேட்டது கிடைக்குமா?
திமுக கூட்டணியில் இடஒதுக்கீடு குறித்து முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என திருநெல்வேலி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உறுதிபட தெரிவித்துள்ளார்...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வந்த நிலையில், அரசியல் கட்சிகள் மும்முரமாகி உள்ளன.. தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதிலும் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன..
திமுக கூட்டணியைப் பொறுத்தவரை, மாவட்ட அளவிலேயே தேர்தல் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது... அதாவது ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களுடன் கூட்டணிக் கட்சி மாவட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்...
உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டி? திமுகவுடன் பேசி முடிவெடுப்போம்! முத்தரசன் நம்பிக்கை!
பேச்சுவார்த்தை
எனினும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை பெற வேண்டும் என்று இடதுசாரிகள் யோசித்து
வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது மூத்த தலைவர் முத்தரசன் சொன்னதாவது: "மாநில உரிமைகளை பாதுகாப்பதில் மக்களுக்கு நன்மை செய்வதில் திமுக சிறப்பாக செயல்படுகிறது.. மாநில உரிமைகளை பறிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுவது நாட்டின் ஒற்றுமை ஒருமைபாட்டை சீர்குலைக்கும் செயலாகும்..
தனியார்மயம்
பொதுத்துறை நிறுவனங்களை விற்பது நல்லதல்ல.. ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சி நடந்து வருகிறது... முழுமையாக தனியார்மயமாக்கும் நடவடிக்கை முற்றிலும் தவறானது, மக்கள் நலனை காட்டிலும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது.. தமிழகத்தில், 10 வருடங்களுக்கு பிறகு, நகர்புற தேர்தலை நடத்த அரசு முனைப்பு காட்டியுள்ளது வரவேற்கத்தக்கது.
வகுப்புவாதம்
ஆனால், இந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாதது சிரமத்தை ஏற்படுத்திவிட்டது.. அந்த 10 வருடங்களாக தேர்தல் நடக்காத குறைபாடுதான் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.. சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலைபோல, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முக்கியத்துவத்துடன் பங்கேற்கும்.. இந்த தேர்தலில் வகுப்புவாதம் சார்ந்த கட்சிகள் வெற்றி பெறகூடாது.. பாஜகவின் இந்த பகீர் முயற்சிக்கு அதிமுக பலியாகிவிட்டது.
குறைபாடுகள்
நாட்டின் மதச்சார்பின்மை கொள்கை மத்திய அரசால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது.. இதனால், பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நாடு முழுதும் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம்.. ஊழல் குறித்து பேச அதிமுகவுக்கு தார்மீக தகுதி இல்லை.. பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் நடந்த குறைபாடுகளை ஆய்வு செய்து, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது வரவேற்கத்தக்கது.
பேச்சுவார்த்தை
திமுக கூட்டணியில் நாங்கள் மைனாரிட்டி பார்ட்னர் இல்லை... திமுக தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதில், சுமுகமான தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையும் உள்ளது.. எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, மக்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தினால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் பிரச்சனைக்காக போராடி, முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்லும்" என்றார் முத்தரசன்