ஜில் ஜில் மழை! வங்கக்கடலில் உருவானது சிட்ரங் புயல்! தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள சிட்ரங் புயலால் தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக உருவானது.
இந்த புயலுக்கு சிட்ரங் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பெயரை தாய்லாந்து நாடு சூட்டியது குறிப்பிடத்தக்கது.
சிட்ரங் புயலானது மத்திய வங்கக்கடல் பகுதியில் இருந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வங்காள தேச கடற்கரை பகுதிகளில் டிங்கோனா தீவு -சந்திவிப் இடையே நாளை காலை கரையை கடக்கிறது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. வழக்கமாக அக்டோபர் 3வது வாரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும் நிலையில், சிட்ரங் புயலால் அது காலதாமதம் ஆகியிருக்கிறது.
சிட்ரங் புயல் நாளை கரையை கடந்த பிறகு தான் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை கணிக்க முடியும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இதுவரை தமிழகத்தில் இயல்பை விட 49% அதிகமாக மழை பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள- வங்கதேச கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஒரிசா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும்! எங்கெங்கு மழை வெளுக்கப்போகுது தெரியுமா?வானிலை மையம் அலர்ட்