பட்டி தொட்டியெங்கும் 'செவ்வாடை' 'இருமுடி' வழி ஆன்மீகத்தை பரப்பிய 'மேல்மருவத்தூர் சக்தி அம்மா'!
சென்னை: தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் மேல்மருவத்தூரில் இருந்தபடியே செவ்வாடை, இருமுடி, கஞ்சி கலயம் வழியே ஆன்மீகத்தை பரப்பியவர் 'மேல்மருவத்தூர் சக்தி அம்மா' என போற்றப்படுகிற, இன்று காலமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்!
தமிழ்நாட்டின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாக உருவெடுத்திருப்பது மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மா. "சுயம்பு" ஆதி பராசக்தியாக தம்மை பிரகடனப்படுத்திய மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் 'பீடங்கள்' (கிளைகள்) வட தமிழ்நாடு தான் என்று இல்லை.. தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும் உண்டு. இந்த சக்தி பீடங்கள் வழியே குக்கிராமங்களையும் மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி "அம்மா" சென்றடைந்திருக்கிறார்.

1990களில் தமிழ்நாட்டின் கிராமங்களில் மார்கழி பூஜை வழிபாடு , இந்துத்துவா அமைப்புகளின் பின்னணியில் பரவியது. மார்கழி பூஜை வழிபாட்டுக்கு இணையான பேராதரவை அண்மைய ஆண்டுகளில் எந்த ஒரு அரசியல் வழி / ஆன்மீக சித்தாந்த வழி பின்புலம் இல்லாமல் பெற்றிருப்பது மேல்மருவத்தூர் ஆதி பரசாக்தி அம்மா வழிபாடு.
தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் இருந்து முருகன் கோவில்களுக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும் படை படையாக பக்தர்கள் திரண்டு செல்வது பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வரும் ஒரு ஆன்மீக நிகழ்வு. இதற்கு சமமான ஒரு ஆன்மீக பயணமாக அல்லது யாத்திரையாக அண்மை காலங்களில் இடம்பிடித்திருப்பது மேல்மருவத்தூர் பயணம்.
மேல் மருவத்தூர் யாத்திரை காலங்களில் பெண் பக்தர்கள், செவ்வாடை அணிந்து இதர கோவில்களுக்கு செல்வதைப் போலவே விரதம் இருந்து கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் மேல்மருவத்தூர் நோக்கி பயணிப்பது தங்களது ஆன்மீக கடமைகளில் ஒன்றாகவே இணைத்துக் கொண்டுவிட்டனர். சபரிமலைக்கு பக்தர்கள் செல்லும் பாணியில் பீடங்களுக்கு போய் மாலை அணிவித்து விரதம் மேற்கொள்வர். பின்னர் சபரிமலைக்கு செல்வதைப் போல மேல்மருவத்தூர் அம்மா கோவிலுக்கு "இருமுடி" கட்டிச் செல்வதும் உண்டு. கூடுதலாக அம்மனுக்கு உரிய கஞ்சி கலயம் சுமப்பதை பிரார்த்தனையாக- வேண்டுதலாக நிறைவேற்றுகிற பக்தர்களும் உண்டு.
இத்தனைக்கும் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் மேல்மருவத்தூர் சக்தி அம்மா எனப்படும் பங்காரு அடிகளார் பிரசாரம் செய்யப் போனதும் இல்லை. மேல்மருவத்தூர் அம்மா எனும் "சக்தி" மீதான இறை நம்பிக்கை வழியே இத்தகைய வழிபாட்டு முறை பரவிக் கிடக்கிறது. பெண்கள் மட்டுமே செல்லக் கூடிய, பெண்கள் மட்டுமே கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்யக் கூடிய பெண்களின் புனித தலமாக மேல்மருவத்தூரை உருவாக்கியவர் பங்காரு அடிகளார் சுவாமிகள். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் சுவாமிகள் இறைவனடியில் இரண்டற கலந்தது செவ்வாடை பக்தர்களுக்கு பெருந்துயரம்!












Click it and Unblock the Notifications