பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி தயாரிக்க அனுமதி மறுப்பு... வீடுகளுக்கு பச்சரிசியை விநியோகிக்க முடிவு
சென்னை: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி தயாரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கான அரிசியை பள்ளிவாசல் நிர்வாகங்கள் மூலம் வீடுகளுக்கே விநியோகம் செய்ய அரசு தலைமை காஜியுடன் தலைமைச் செயலாளர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் தமிழகத்தில் வரும் 25-ம் தேதி முதல் கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் போது பள்ளிவாசல்களில் சிறப்பு இரவு நேர தொழுகை(தராவிஹ்) நடத்தப்படுவது வழக்கம். மேலும், நோன்புக் கஞ்சி தயாரித்து நோன்பாளிகளுக்கு அந்த கஞ்சி வழங்கப்படும். இதனிடையே கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த நடைமுறையில் இந்தாண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு பதில் அதற்கான அரிசியை பள்ளிவாசல் நிர்வாகங்கள் மூலம் வீடுகளுக்கு கொடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
வரும் 19-ம் தேதிக்குள் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் பச்சரிசி வழங்கப்படும் என்றும், அதனை 23-ம் தேதிக்குள் இஸ்லாமிய பெருமக்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இப்தார், இரவு நேர சிறப்பு தொழுகை உள்ளிட்ட வணக்க வழிபாடுகளை அவரவர் வீடுகளிலேயே மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இது போன்ற விவகாரங்கள் முடிவெடுக்கும் போது இஸ்லாமிய கட்சிகள் அமைப்புகளின் தலைவர்களை அழைத்து தான் தலைமைச் செயலாளர் ஆலோசித்து முடிவை அறிவிப்பார். ஆனால் இன்று தமிழ்நாடு அரசு தலைமை காஜியை அழைத்து அவருடன் மட்டும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications