"வௌங்கிரும்".. மொத்த பகையும் தீர்த்துக்க ஈரோடு வர்றோம்.. நாம் தமிழர் கட்சி சேலஞ்ச்.. கவனிக்கும் திமுக
நாம் தமிழர் கட்சியின் வியூகம் இடைத்தேர்தலில் என்னவாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது
சென்னை: நடக்க போவது, ஒரே ஒரு இடைத்தேர்தல் என்றாலும்கூட, இங்கு வெற்றி பெறுவது அந்த அளவுக்கு சுலபம் இல்லை என்று அரசியல் நோக்கர்கள் ஆருடம் சொல்லி வருகிறார்கள். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி களமிறங்க உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு அக்கட்சி வாழ்த்து கூறியுள்ளது, பரபரப்பை கூட்டி வருகிறது.
கடந்த 2021 தேர்தலில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி 11 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் 10 ஆயிரத்து 5 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பெற்றன
இதுவரை தனித்து தேர்தல்களை சந்தித்து வரும் நாம் தமிழர் கட்சி பல தொகுதிகளில் காங்கிரசின் தோல்விக்கு காரணமாக இருந்துள்ளதை மறுக்க முடியாது,.
3வது பெரிய கட்சி.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமான் போட்டி? நாம் தமிழர் பிளான் இதுதான்!
ஆக்ஷன்
கடந்த முறை, இதே ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை பிடித்திருந்தது நாம் தமிழர் கட்சி.. பாஜகவை போலவே, காங்கிரஸையும் பொதுவான அரசியல் எதிரியாக கருதி வருகிறது நாம் தமிழர் கட்சி.. "பாஜக - காங்கிரஸ் இவங்க 2 பேரும் ஒன்றுதான்" என்று அடிக்கடி சொல்லி கொண்டே இருப்பவர் சீமான்.. "இரண்டு கட்சிகள் இடையே கொள்கை ஒன்றுதான்.. ஆனால் கட்சிகள் மட்டுமே வேறு.. பணமதிப்பிழப்பீடு தவிர்த்து சிஏஏ, என்ஆர்சி, என்ஐஏ, ஜிஎஸ்டி, நீட் தேர்வு இவைகளை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் அவற்றை செயல்படுத்தியது பாஜக. 2 பேருமே பேராபத்தை நோக்கி நாட்டை நடத்துபவர்கள்" என்று மேடைக்கு மேடை சீமான் முழங்கியும் வருகிறார்.
அதிரடி சீமான்
அதனால்தான், மற்ற தொகுதிகளைவிட, காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும், எப்போதுமே கூடுதலாக கவனம் செலுத்தி, பிரச்சாரங்களிலும் ஈடுபடும் நாம் தமிழர் கட்சி. அந்தவகையில், ஒவ்வொரு தேர்தலிலும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸின் வாக்குகளையும் பிரிப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது நாம் தமிழர் கட்சி.. ஒருவேளை, நடக்க போகும் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாத சூழலில், நாம் தமிழர் கட்சி 2வது அல்லது 3வது இடத்தை கூட தக்கவைக்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. தற்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டு வரும்நிலையில், நேரடியாகவே, காங்கிரஸுடன் மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது, அக்கட்சிக்கான களத்தை எளிதாகி உள்ளது.
ஈரோடு வர்றேன்
அதுமட்டுமல்ல, திமுக போட்டியிட்டிருந்தால்கூட, தொகுதிக்குள் தாராளத்தை காட்டி, மற்ற கட்சிகளுக்கு நெருக்கடி தந்திருக்க முடியும்.. ஆனால், காங்கிரஸே களமிறங்கி உள்ளது, சீமானுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளதுடன், தேர்தல் களத்தையும் சுலபமாக்கியுள்ளது.. வருகிற 28ம் தேதிக்குள் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் சீமான் தெரிவித்துள்ளதுடன், "நானும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்வேன்" என்று அறிவித்துள்ளதால் எதிர்பார்ப்பு கூடிவருகிறது..
மொத்த பகையும்
தினகரனை பொறுத்தவரை திமுகதான் பிரதான எதிரி என்று சொல்லி வருகிறார்.. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடியும் திமுகவையே சாடி வருகிறார்.. பாஜக போட்டியிட நேர்ந்தாலும், திமுகவையே குறி வைத்து பிரச்சாரம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. சீமானும் திமுகவை விமர்சித்து வரும்சூழலில், திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை, ஈரோடு கிழக்கில் யார்தான் அள்ள போகிறார்கள் என்பதுதான் அதைவிட மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எகிறி வருகிறது.
வாழ்த்துக்கள் இளங்கோவன்
இந்த நிலையில், தொகுதியில் போட்டியிட உள்ள, காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, திமுக கூட்டணி கட்சிகள், இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்து சொல்லி வருகின்றனர்.. அந்தவகையில், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகனும் வாழ்த்து சொல்லி உள்ளார்.. இது தொடர்பாக ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.. அதில், "வாழ்த்துகள் இளங்கோவன் அவர்களே! மொத்த பகையும் தீர்த்துக் கொள்ள ஈரோடு வருகிறோம்'' என்று சவால் விட்டுள்ளார்.
"வெளங்கிரும்"
முன்னதாக, இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள வைகோவிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்று ஈவிகேஎஸ் தன் வேண்டுகோளை வெளிப்படுத்தியிருந்த நிலையில், வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்று அதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.. இதனை தன்னுடைய ட்விட்டர் பதிவிட்ட துரைமுருகன், "வெளங்கிரும்" என்றும் ஒரே வார்த்தையில் கமெண்ட் பதிவிட்டுள்ளார்.. இதற்கு திராவிட கட்சிகள் திரண்டு வந்து பதிலடி தந்து கொண்டிருக்கின்றன.
பொய்பிம்பம்
இதனிடையே நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "ஜனவரி 29ம் தேதி ஈரோட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும். அதன் பிறகு பிரச்சாரம் தொடர்ந்து நடைபெறும்.. விமர்சனங்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னுடைய வேலை வெல்ல வேண்டும். நாங்கள் எங்கள் இலக்கை நோக்கி தான் பயணிப்போமே தவிர அவங்க விமர்சிப்பார், இவங்க விமர்சிப்பார், அவங்க ஆதரிப்பார்கள் என்பது பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. எத்தனை அணிகள் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். ஆளும்கட்சி தான் வெல்லும் என்ற பொய் பிம்பத்தைக் கட்டமைத்து விடுகிறார்கள். மக்கள் மாற்றத்தை விரும்பிவிட்டால் ஆளுங்கட்சியாவது எதிர்க்கட்சியாவது? ஒன்னும் கிடையாது... காவல்துறை உளவுத்துறை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்கும் அந்த மாதிரி சூழலில் ஆளும்கட்சிதான் வெல்லும் என கட்டமைக்கப்படுகிறது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.