விஜயகாந்த் வீட்டை சுற்றி வரும் 2 விஷயங்கள்.. சுதீஷ் வரை எட்டிய புகார்கள்.. குழம்பும் தொண்டர்கள்
தேர்தலை எதிர்கொள்ள முடியாமல் தேமுதிக நிர்வாகிகள் தவித்து வருகிறார்களாம்
சென்னை: 2 விதமான பிரச்சனைகளில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறதாம் தேமுதிக மேலிடம்.. இதை எப்படி சரிசெய்வதென்று தெரியாமல் பிரேமலதா விழித்து கொண்டிருக்கிறாராம்..!
நடந்து முடிந்த சமீபத்திய தேர்தல்களில் மண்ணை கவ்விக் கொண்டிருக்கிறது தேமுதிக.. கூட்டணியும் வைக்க முடியாமல், தேர்தலில் வெற்றியும் பெற முடியாமல் திணறி வருகிறதுஅக்கட்சி.
இப்போது விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வேறு வழியில்லாமல் தயாராகி வருகிறது.. ஆனால், அந்த பணிகளும் ஆமை வேகத்தில் நடக்கிறதாம்.
தனித்து களமிறங்கும் தேமுதிக! செலவுக்கு திணறும் நிர்வாகிகள்! பிசுபிசுக்கும் தேர்தல் பணிகள்!
செலவு தொகை
தேமுதிகவில் ஏற்கனவே இருந்த பசையுள்ள பார்ட்டிகள் விலகி சென்றுவிட்ட நிலையில், கட்சிக்கு செலவு செய்ய முடியாத நிலைமை உள்ளது. அதனால் தேர்தல் சமயத்தில் நிர்வாகிகள் திணறும் போக்கும் தொடர்ந்து வருகிறது.. ஒன்றிய வார்டு கவுன்சிலருக்கே பல லட்சங்கள் இன்றைய நாட்களில் செலவு செய்ய வேண்டிய நிலைமை அரசியல் களத்தில் உள்ளபோது, நகராட்சி, மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கான தேர்தல் செலவு தொகையோ நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு எகிறி விடும் என்பது கள யதார்த்தம்.
ஹைகோர்ட் உத்தரவு
இப்போதும் இதே பிரச்சனைதான் கட்சிக்குள் தலைதூக்கி உள்ளது.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடை கிடைக்கும் என தேமுதிக எதிர்பார்த்திருந்திருக்கிறது. தடை கிடையாது என்று தெரிந்ததுமே அப்-செட்டாகி விட்டாராம் பிரேமலதா. காரணம், உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்பது உறுதியானதால் தனித்து போட்டி என பிரேமலதா அறிவித்தலிருந்தே தேமுதிக தொண்டர்களிடம் உற்சாகம் மிஸ்ஸிங்.
பிரேமலதா அப்செட்
இதனால் யாருக்குமே போட்டியிட ஆர்வமும் இல்லாமல் போய்விட்டது.. அதுமட்டுமல்ல, தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் கட்சி தலைமையிடமிருந்து தேர்தல் செலவுக்கு பணம் வாங்கிக் கொடுங்கள் என மாவட்ட செயலாளர்களிடம் வெளிப்படையாகவே தெரிவித்து விட்டனர் அக்கட்சியின் நிர்வாகிகள்... இதனை பிரேமலதாவிடமும் சுதீஷிடமும் மாவட்ட செயலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.. நிர்வாகிகளின் இந்த மனநிலை அறிந்து மிகவும் கவலையடைந்தாராம் பிரேமலதா.
அடுத்த சிக்கல்
இந்த நிலையில்தான், உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போனால் நல்லது என்று கணக்கு போட்டுள்ளார்.. ஆனால், தடை கிடையாது என்று ஹைகோர்ட் தெரிவித்திருப்பதில் அவர் மிகவும் அப்செட்டாகி உள்ளார்.. கட்சி தொண்டர்களை வலுக்கட்டாயமாக களமிறக்கினாலும் அதிகாரம் மற்றும் பண பலத்தில் களமிறங்கும்ஆளும் கட்சியையும் , பணபலத்தில் களமிறங்கும் அதிமுகவையும் எதிர்த்து நம்மால் வெற்றிபெற முடியாது என்பதால் தேர்தலை எந்த வகையில் எதிர்கொள்ளலாம் என மாவட்ட செயலாளர்களோடு கலந்தாலோசிக்க முடிவு செய்திருக்கிறாராம் பிரேமலதா..!