கைகூப்பி கும்பிட்ட விஜயகாந்த்.. பளிச்சென பச்சை சட்டையில் பொங்கல் கொண்டாடிய கேப்டன்! முகம் காட்டலையே
சென்னை: உடல்நலக்குறைவால் பல மாதங்களாக வெளியில் வந்து தொண்டர்களை சந்திக்காமல் இருந்து வந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு தன்னுடைய தொண்டர்களை சந்தித்தார். இந்த நிலையில் இன்று சாலிகிராமத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் அவர் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார்.
தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து முன்னணி நடிகராக கோலோச்சியவர் விஜயகாந்த். 20ங்களின் தொடக்கம் வரை ஹிட் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து முடிசூடா மன்னனாக திகழ்ந்து வந்த விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார்.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தன்னுடைய கட்சி இருக்கும் என்று அறிவித்த அவர், பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டார். முதல் தேர்தலிலேயே தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றிபெற்ற விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
ஆளுநருக்கு தமிழ் என்னான்னு தெரியுமா?தமிழ்நாடுன்னா என்னான்னு தெரியுமா? விஜயகாந்த் போல சீறிய பிரேமலதா!
விஜயகாந்த் செய்த அரசியல்
விஜயகாந்தின் ஆக்கிரோஷமான உணர்ச்சி மிகுந்த பேச்சு, சினிமாவில் அவருக்கு இருந்த ரசிகர் பலம் என அனைத்தும் அரசியலில் அவருக்கும் கைகொடுத்தது. அதன் தொடர்ச்சியாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இதில் அதிமுக - தேமுதிக கூட்டணி திமுகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியது.
எதிர்க்கட்சித் தலைவர்
அந்த தேர்தலில் திமுகவை விட அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் பதவியேற்றார். தமிழ்நாடு அரசியலில் இனி விஜயகாந்த் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான், 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் அவர். இதன் காரணமாக விஜயகாந்திற்கு இருந்த மக்கள் ஆதரவு குறையத் தொடங்கியது.
மக்கள் நலக் கூட்டணி
அடுத்து 2016 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு தலைமை தாங்கி தேமுதிக போட்டியிட்டது. ஆனால், அக்கட்சி அதிலும் படுதோல்வியை சந்தித்தது. இதனால் விஜயகாந்தின் செல்வாக்கும் தமிழ்நாடு அரசியலில் சரியத் தொடங்கியது. மறுபக்கம் விஜயகாந்தின் உடல் நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டு அவர் இயல்பாக பேசும் நிலையை இழந்தார்.
உடல்நிலை பாதிப்பு
2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டசபைத் தேர்தல்களிலும் விஜயகாந்தை பிரச்சாரங்கள், கட்சி கூட்டங்களில் அதிகம் பார்க்க முடியவில்லை. உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்ததால் வீட்டிலேயே அவர் முடங்கினார். அவரது மனைவி, மைத்துனர் மற்றும் மகன் ஆகியோர் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொண்டர்களுடன் சந்திப்பு
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நீரிழிவு நோய் அதிகரித்ததால் அவரது கால் விரல் அகற்றப்பட்டன. அதேபோல் உடல் மெலிந்த நிலையில் இருந்த விஜயகாந்த் புகைப்படமும் வெளியாகி மக்களை கவலையடைய செய்தது. தேமுதிக தொண்டர்கள், விஜயகாந்த் ரசிகர்கள் அவரை நேரில் காண தவம் கிடந்த நிலையில்தான் புத்தாண்டு அன்று அவர் தேமுதிக தலைமையகத்தில் தொண்டர்களை சந்தித்தார்.
பொங்கல் கொண்டாட்டம்
இந்த நிலையில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய முறைபடி சென்னை சாலிகிராமத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் குடும்பத்துடன் விஜயகாந்த் பொங்கல் கொண்டாடினார். விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோர் பொங்கலை சிறப்பாக கொண்டாடினார். பச்சை நிற சட்டையை அணிந்திருந்த அவர், முகக்கவசம் மற்றும் கண்ணாடியை அணிந்திருந்ததால் அவரது முகம் தெளிவாக தெரியவில்லை.