சட்டசபை தேர்தலில் ஏழைகள் & நடுத்தர வர்க்கத்தினரின்.. முதல் சாய்ஸ் திமுக தான்... அதிமுக நிலை என்ன?
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாலினம், வர்க்கம் உள்ளிட்ட பிரிவுகளில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியின் வாக்குகள் எப்படி இருந்தன என்பது குறித்த தரவுகளை இந்து சி.எஸ்.டி.எஸ்-லோக்னிட்டி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வென்று திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று பதவியேற்றார். இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வென்றது. அதேநேரம் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றது.
தமிழக சட்டசபை சபாநாயகராக தேர்வாகிறாரா அப்பாவு?.. நெல்லை மக்களை மகிழ்விக்க ஸ்டாலின் செம வியூகம்!
இந்நிலையில் தேர்தலில் பாலினம், வர்க்கம் உள்ளிட்ட பல பிரிவுகளில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி எந்தளவு வாக்குகளைப் பெற்றுள்ளன என்பது குறித்த தரவுகளை இந்து சி.எஸ்.டி.எஸ்-லோக்னிட்டி வெளியிட்டுள்ளது.
திமுக கூட்டணி
கடந்த 2016 தேர்தலுடன் ஒப்பிடும்போது, ஆண் வாக்காளர்கள் வாக்கு திமுக கூட்டணிக்கு அதிகரித்துள்ளது. திமுக கூட்டணிக்கு ஆண்களின் வாக்கு 12% வரை அதிகரித்துள்ளது. அதேபோல பெண்களின் வாக்குகளும் திமுகவிற்குக் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் பெண்களின் வாக்கு 1% திமுகவுக்கு அதிகமாகப் பதிவாகியுள்ளது.
பெண்கள் வாக்குகளைத் தக்க வைத்த அதிமுக
திமுகவுடன் ஒப்பிடும்போது, அதிமுகவிற்கு விழுந்த பெண்களின் வாக்கு குறைவாகவே உள்ளது. இருப்பினும் அதிமுக முன்னாள் தலைவி ஜெயலலிதா இல்லாத நிலையிலும், கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிமுகவின் பெண் வாக்காளர்களின் வாக்கு வங்கியில் பெரியளவில் மாற்றமில்லை. அதேபோல பள்ளிப்படிப்பைத் தாண்டியவர்கள், கல்லூரி பட்டங்களைப் பெற்றவர்கள் மத்தியில் அதிமுக கூட்டணி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளனர். திமுக கூட்டணியைப் பொறுத்தவரைக் கல்வியைப் பெற முடியாத சூழலில் உள்ளவர்களின் வாக்குகள் அதிகரித்துள்ளது.
நகரப்புறங்களில் வலுவாக மாறிய திமுக
நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப் புறங்கள் என எடுத்துக்கொண்டால், திமுக கூட்டணியின் வாக்குகள் 9% வரை அதிகரித்துள்ளது. அதிமுக கூட்டணியின் வாக்குகளும் நகரப்புறங்களில் 7% வரை அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் இரு கூட்டணியின் வாக்கு சதவிகிதத்திலும் பெரியளவில் மாற்றமில்லை.
Array
வர்க்கத்தின் அடிப்படையில் பார்க்கும்போதும், ஏழைகளின் வாக்கு பெருவாரியாக திமுக கூட்டணிக்கே விழுந்துள்ளது. சிறிய நகரங்களிலும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் திமுக கூட்டணிக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. திமுக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெற்றி பெற இவை முக்கிய காரணங்களாக அமைந்தன என்று இந்து சி.எஸ்.டி.எஸ்-லோக்னிட்டி தெரிவித்துள்ளது