“கொசு” - மேயர் பிரியாவுக்கு 29 வயசுதான்.. மோடி 8 வருசமா பேட்டி கொடுக்கலயே! திமுக சிவசேனாபதி கேள்வி'
சென்னை: 8 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி பத்திரிகையாளர்களையே சந்திக்காத நிலையில் 29 வயதான சென்னை மேயர் பிரியாவின் உச்சரிப்பை பாஜகவினர் விமர்சிப்பதை பார்த்து சிரிப்பை அடக்கு முடியவில்லை என திமுக நிர்வாகி கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்து உள்ளார்.
காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலரும், திமுக சுற்றுச்சூழல் பிரிவு மாநில செயலாளருமான கார்த்திகேய சிவசேனாபதி, பாஜகவினரால் தொடர்ந்து விமர்சிக்கப்படும் சென்னை மேயர் பிரியாவை ஆதரித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
அதில், "அன்புள்ள பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களே சிந்தித்துப்பாருங்கள்... சென்னை மேயர் திருமதி.பிரியா ராஜன் அவர்களுக்கு பத்திரிகையாளரை 29 வயதில் சந்திப்பதில் திராணியும் தைரியமும், மனபலமும் உள்ளது.
ரூ.786 கோடி நஷ்டம்.. சென்னையில் அம்மா உணவகங்கள் மூடப்படுமா? மாநகராட்சி மேயர் பிரியா சொன்ன பதில்!
கார்த்திகேய சிவசேனாபதி பேச்சு
இந்த வயதில் சில வார்த்தைகள் பேச்சு வழக்கில் தவறாக உச்சரிப்பதில் தவறு ஒன்றும் கிடையாது. இன்னும் பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு பாருங்கள் நிச்சயமாக இன்னும் மிக பெரிய பொறுப்புகள் பெற்று அனுபவங்களை பயின்று மிகச்சிறப்பாக செயல்படுவார் சகோதரி திருமதி.பிரியா ராஜன்.
பத்திரிகையாளர்களை சந்திக்காத பிரதமர்
திருமதி.பிரியா ராஜன் வயதிலே குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் இன்றைய ஒன்றிய அரசின் பிரதமரும் எங்கு இருந்தார் என்பது கூட யாருக்கும் தெரியாது. கடந்த 8 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்காத ஒரே ஒன்றிய பிரதமர் என்ற பெருமை அவரையே சாரும்.
வயிறு எரிகிறது
அப்பேர்பட்ட ஒன்றிய பிரதமரை வைத்துக்கொண்டு ஒரு மாநகராட்சியின் மேயரை கிண்டல் செய்வதைப் பார்த்தால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. ஏன் உங்களுக்கு உங்கள் வயிறு எரிகிறது என்று தெரிகிறது. இதுவே தமிழ் தெரியாத பார்பனர் ஒருவரை மேயராக தேர்ந்தெடுத்து இருந்திருந்தால் அவருடைய ஆங்கில புலமையை பாருங்கள் ஆங்கில அறிவைப் பாருங்கள் என்று கூவியிருப்பீர்கள்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்தவர்
உங்களுக்கு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து யார் மிகப்பெரிய பொறுப்பிற்கு வந்தாலும் உங்களுக்கு எரியதான் செய்யும். இதில் வருத்தம் என்னவென்றால் பிற்படுத்தப்பட்டர்களை வைத்து தாழ்த்தப்பட்டவர்களை விமர்சனம் செய்வது நமது கையையே வைத்தே நமது கண்ணை குத்துகிற சூழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ்., பாஜக செய்வது வருத்தமான செயல்.
மேயர் பிரியா கொடுத்த பேட்டி
கடந்த நவம்பர் மாதம் சென்னை மேயர் பிரியா ராஜன், திருவிக நகரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சாலையோரங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் கொசு வலைகள் வழங்கப்படுகிறது. இரண்டரை லட்சம் கொசு வலைகள் இதற்காக தயார் நிலையில் உள்ளன." என்றார்.
அண்ணாமலை விமர்சனம்
அப்போது ஒரு இடத்தில் கொசு வலை வழங்கும் திட்டம் என்று அழைப்பதற்கு பதிலாக கொசு வழங்கு திட்டம் என்று தவறுதலாக சென்னை மேயர் பிரியா கூறி விட்டார். இதனை சுட்டிக்காட்டி பாஜக நிர்வாகிகள் பலரும் மேயர் பிரியாவை சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், "சென்னை கொசு வழங்கும் திட்டம் என்று பேசுகிறார். கொசு விற்க சென்னையில் ஒரு மேயர்." என்று விமர்சித்தார்.