சாதி மதத்தை வைத்துத் திட்டுவார்கள்.. வாழ்க வசவாளர்கள்.. ஐடி விங்கிற்கு அட்வைஸ் கொடுத்த ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சாதியைச் சொல்லித் திட்டுவார்கள், மதத்தை வைத்துத் திட்டுவார்கள், பெண்களாக இருந்தால் ஆபாசமாகத் திட்டுவார்கள், நமது குடும்பத்தை இழிவுபடுத்துவார்கள் அதுதான் அவர்களின் பண்பாடு எனவும், 'வாழ்க வசவாளர்கள்' என்கிற அடிப்படையில்தான் நாம் செயல்படவேண்டும் இதுதான் நமது பண்பாடு என திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இன்று தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் நடைபெற்ற காணொலிக் கலந்துரையாடலில் பங்கேற்று, கழகத் தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு வழிகாட்டுதல்களை வழங்கி உரையாற்றினார்.

தகவல் தொழில்நுட்ப அணியினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வருகிறது. கழக அரசின் சாதனைகளை இளைஞர்களிடையே - சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உங்களுக்குத்தான் உள்ளது என கூறினார்.

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்

நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய ஸ்டாலின் "ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நான் எப்படிப் பணியாற்றி வருகிறேன் என்று நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. நாள்தோறும் மக்களோடு மக்களாக இருக்கிறேன். கோட்டையில் உட்கார்ந்து உத்தரவு போடுபவனாக மட்டுமின்றி - மக்களுக்கு அந்த உத்தரவுகளின் பயன் முறையாகப் போய்ச் சேருகின்றனவா என்பதைக் கவனிக்கும் பணியையும் செய்துகொண்டு இருக்கிறேன். இதற்குச் சாட்சியாகப் பல புகைப்படங்களும் காணொளிகளும் செய்திகளும் உள்ளன. சிலர் போல போட்டோஷாப் செய்யாமல் இருப்பதால்தான் நடுநிலையாளர்களின் நம்பிக்கையை நாம் பெற்றிருக்கிறோம். அகில இந்திய அளவிலான ஊடகங்கள் நம்மைப் பாராட்டி வருகின்றன. இதையெல்லாம் நீங்கள் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

கடமை இருக்கிறது

கடமை இருக்கிறது

இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத சாதனைகளை நாம் செய்துகொண்டு வருகிறோம். கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருக்கிறோம். கோப்புகள் எப்போதும் - எந்தச் சூழலிலும் தேங்கக் கூடாது என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொல்வார். அந்த அடிப்படையில், என்னிடம் வரும் அனைத்துக் கோப்புகளையும் அந்தந்த மாதத்துக்குள் முடிவுகளை எடுத்து முடித்திருக்கிறேன். இவை அனைத்தையும் தமிழ்நாட்டு இளைஞர்கள், இணையத்தள மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.

திசை திருப்ப முயற்சி

திசை திருப்ப முயற்சி

இந்தச் சாதனைகளைச் சொன்னாலே போதும் - தி.மு.க.வின் வெற்றி எளிதாகிவிடும். திமுக மீதான நம்பிக்கை அதிகம் ஆகும். இந்த சாதனைகளை மறைக்கவும் - திசைதிருப்பவும்தான் எதிரணியினர் முயற்சி செய்கிறார்கள். நமக்கு எதிராக, எதிரணியினர் செய்து வருகிற பணிகள் எது என்று கேட்டால் - நம் மீது அவதூறுகள் பரப்புவதும், பொய்கள் சொல்வதும்தான். உண்மையான - ஆக்கப்பூர்வமான விமர்சனமாக இருந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்கள் பொய்களை, உண்மை போலக் காட்ட நினைக்கிறார்கள்.

உண்மை ஒன்றே போதும்

உண்மை ஒன்றே போதும்

மலையளவு பொய்யாக இருந்தாலும், அதை உடைக்க உண்மை ஒன்றே போதும். அதை யாரும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொன்னாலே போதும். எதிரணியினர் நம்மைக் கோபப்படுத்துவார்கள், ஆத்திரப்படுத்துவார்கள். அதற்கு நாம் எதிர்வினையாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் எதிர்பார்ப்பது. அவர்களைப் போல நீங்கள் செய்யாதீர்கள். நாம் மிகப்பெரிய இயக்கம் - அதுவும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் இயக்கம். அவர்கள் போல நாம் நடந்துகொள்ள முடியாது. வெறும் கரண்டி பிடித்துள்ளவன் கையை எப்படி வேண்டுமானாலும் ஆட்டலாம். ஆனால் எண்ணெய்க் கரண்டியைக் கையில் வைத்துள்ள நாம் அந்த மாதிரி செய்ய முடியாது. ஆட்சியில், அதிகாரத்தில் நாம் இருப்பதால் அவர்கள் அளவுக்குக் கீழே இறங்கி சண்டை போட முடியாது. எனவே எச்சரிகையுடன்தான் நாம் நம்முடைய வாதங்களை வைக்க வேண்டும். இதை நீங்கள் எப்பவும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

சாதியைச் சொல்லித் திட்டுவார்கள்

சாதியைச் சொல்லித் திட்டுவார்கள்

சாதியைச் சொல்லித் திட்டுவார்கள். மதத்தை வைத்துத் திட்டுவார்கள். பெண்களாக இருந்தால் ஆபாசமாகத் திட்டுவார்கள். நமது குடும்பத்தை இழிவுபடுத்துவார்கள். அதுதான் அவர்களின் பண்பாடு! 'வாழ்க வசவாளர்கள்' என்கிற அடிப்படையில்தான் நாம் செயல்படவேண்டும்! இதுதான் நமது பண்பாடு. பதில் சொல்கிறோம் என்று நினைத்துக் கொண்டு புதுப் பிரச்சினையை உருவாக்கக் கூடாது. சமீபகாலமாகத் தேவையற்ற சில விமர்சனங்களை நம்முடைய இணையதளத் தோழர்களில் சிலர் செய்கிறார்கள். அதையும் நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் கவனத்துக்கு எதுவும் தப்புவதில்லை.

கழகத்திற்கு கெட்ட பெயர்

கழகத்திற்கு கெட்ட பெயர்

தலித் தலைவர்கள் குறித்தும் - இலங்கை விவகாரங்கள் குறித்தும் - அவசியமற்ற விவாதங்களைச் சிலர் செய்வது மூலமாகக் கழகத்துக்கு அவர்கள் நன்மையைச் செய்யவில்லை; கெட்ட பெயரைத்தான் தேடித் தருகிறார்கள். அதுபோன்ற செயல்களைச் செய்யாதீர்கள். நம்மிடம் சொல்வதற்கு ஏராளமான சாதனைகள் இருக்கின்றன. நம்மிடம் சொல்வதற்கு வரலாறு இருக்கிறது. நமது முன்னோடியான தலைவர்கள், மிகப்பெரியவர்கள் - லட்சிய வேட்கை கொண்டவர்கள் - அதற்காகப் பல தியாகங்களைச் செய்தவர்கள்! இதைச் சொன்னாலே போதும். தேவையில்லாததைச் சொல்ல வேண்டாம்.

செயல்பாடுகளை தொடருங்கள்

செயல்பாடுகளை தொடருங்கள்

மேடைப் பேச்சில் எழுத்துத் திறத்தில் வல்லவர்களான திராவிட இயக்கத்தினர் - திராவிட முன்னேற்றக் கழகத்தினர், டிஜிட்டல் யுகத்தில், ஃபேஸ்புக் - ட்விட்டர் - யூடியூப் - இன்ஸ்டாகிராம் என்று அனைத்துத் தளங்களிலும் தங்களது படைப்பாற்றலால் கழகக் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் தீரர்களாக உருவாக வேண்டும். புதிய திறமையாளர்களை அடையாளம் காணுங்கள்! அவர்களது படைப்பாற்றலை ஊக்குவியுங்கள்! அவர்களது படைப்புகளின் வழியாகக் கழகக் கொள்கைகளை எட்டுத்திக்கும் கொண்டு செல்லுங்கள்! கருப்பும் சிவப்பும் இணையத்தை ஆளட்டும்! புது யுகம் எங்களது யுகம் என ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைத் தொடருங்கள்" என உரையாற்றினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+