நோட் பண்ணீங்களா.. செந்தில் பாலாஜி யாரை சொல்கிறார் தெரிகிறதா.. "அவரேதான்".. கிறுகிறுக்கும் கரூர்
அமைச்சர் செந்தில் பாலாஜி எம்பி ஜோதிமணியை விமர்சித்துள்ளார்
சென்னை: 2 நாள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி, அதில் வெற்றியும் பெற்றார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.. இந்நிலையில், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு முக்கியமான பேட்டி தந்துள்ளார்.
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மூலம் மாற்று திறனாளிகள் நலத்திட்ட செயல்பாடுகள் (ADIP) என்ற திட்டம் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.. இந்த திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிக்கு பல்வேறு உதவிகள், 3 சக்கர வாகனங்கள், ஸ்பெஷல் நிதி உதவிகள் அளிக்கப்பட்டும் வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாட்டிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் கரூரில் மட்டும் இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை என்று கூறி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கலெக்டர் ஆபீசுக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்..
மத்திய அரசு கொடுக்கிறது! வாய்ப்பை நழுவவிடாதீர்கள்! சிறுபான்மையின மாணவர்களுக்கு ஜவாஹிருல்லா அறிவுரை!
போராட்டம்
மேலும் தலைமைச் செயலர் இறையன்புக்கும் ஒரு கடிதம் எழுதினார்... யார் சொல்லியும் சமாதானம் ஆகாமல், இரவெல்லாம் அங்கேயே தூங்கி போராட்டம் செய்தார். இறுதியில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்வதாக ஜோதிமணியிடம் உறுதி அளிக்கப்பட்டதையடுத்து, தொடர் போராட்டத்தை வாபஸ் பெற்றார். இதையடுத்து நன்றி தெரிவித்து ஒரு ட்வீட் போட்டிருந்தார்..
உத்தரவாதம்
அதில், "கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ADIP முகாம் நடத்தப்படும் என்று உத்திரவாதம் கொடுக்கப்பட்டத்தை அடுத்து எமது உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. மக்கள் நலனில் அக்கறையுள்ள முதல்வர் முக ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி என பதிவிட்டிருந்தார்.
செந்தில்பாலாஜி
ஆனால், அதேமாவட்டத்தை சேர்ந்த திமுகவின் முக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை ஜோதிமணி குறிப்பிடவில்லை.. செந்தில்பாலாஜி - ஜோதிமணியின் சகோதர பாசத்தை இந்த நாடு அறியும் என்றபோதிலும், அவர் பெயரை தவிர்த்திருந்தார். ஆளும் கட்சி கூட்டணியில் இருந்து கொண்டு, ஜோதிமணி நடத்திய இந்த போராட்டத்தை காங்கிரஸின் சீனியர் அமைச்சர்களும் ரசிக்கவில்லை, திமுகவும் ரசிக்கவில்லை என்றே முணுமணுக்கப்பட்டது.. அரசின் நடவடிக்கையை மறைமுகமாக ஜோதிமணி விமர்சித்ததையும் திமுக கவனிக்காமல் இல்லை..
பேட்டி
இப்படிப்பட்ட சூழலில்தான் அமைச்சர் செந்தில்பாலாஜி ஒரு பேட்டி தந்துள்ளார்.. "கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் தமிழகம் மிகை மின் மாநிலம் என்று சொன்னவர்கள், நாலரை லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு ஏன் வழங்கப்படவில்லை? திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியில் ஆறு மாதங்களில் ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு மின்கட்டணம் மூலம் மின்சாரம் பெற்று வரும் பூந்தோட்ட மின் இணைப்பு பெற்றவர்களுக்கு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இலவச மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அட்டாக்
ஒரு சிலர் தாங்கள் இருப்பதை காட்டிக் கொள்வதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் மீதும், மாவட்ட ஆட்சியர் மீதும் குற்றச்சாட்டு வைக்கின்றனர். செய்தித்தாள்கள் தொலைக்காட்சிகளில் தாங்கள் இருப்பதைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் அப்படி செய்கின்றனர்" என்றார். இத்தனை நாள் கழித்து இன்றுதான் இந்த விவகாரம் குறித்து செந்தில்பாலாஜி வாய் திறந்துள்ளார் என்றாலும், ஜோதிமணியை மறைமுகமாகவே இப்படி குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.