மாஸ்டர்பிளான்! கராத்தே, குங்பூ கற்றவர்களுக்கு வலைவீசும் திமுக.. பறந்து வரும் போஸ்டிங்.. இதான் காரணம்
சென்னை: கராத்தே, குங்பூ போன்ற தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களை தங்கள் தொண்டர் அணியில் நிர்வாகிகளாக நியமிக்க திமுக முடிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தற்காப்புக் கலை வித்தகர்களை அக்கட்சியினர் வலைவீசி தேடி வருகின்றனர். அதேபோல, இளைஞர் அணி நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட உள்ளவர்களுக்கும் உயரம் ஒரு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஒரு கட்சியில் நிர்வாகிகளாக இருப்பவர்களுக்கு தற்காப்புக் கலையும், உயரமும் ஏன் தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது என பொதும்ககள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

முழுவீச்சில் நிர்வாகிகள் தேர்வு
திமுகவில் இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி உள்ளிட்ட 23 அணிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணிகளுக்கான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் பணி கடந்த சில வாரங்களாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அண்மையில்தான் திமுகவின் மேற்குறிப்பிட்ட அணிகளுக்கான மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

ஸ்டாலின் வலியுறுத்தல்
இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுகவின் அனைத்து அணிகளுக்கும் மாவட்டம், மாநகரம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் அளவில் நிர்வாகிகளை வேகமாக நியமிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் 15 லட்சம் பேருக்கு கட்சியில் பதவிகள் கிடைக்கும் எனவும் கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் நியனம் தொடர்பாக அந்தந்த அணிகளின் மாநிலச் செயலாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

கராத்தே, குங்பூ பயின்றவர்கள்..
இந்நிலையில்,திமுக தொண்டர் அணியின் மாநிலச் செயலாளர் பெ. சேகர் சில தினங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், "தொண்டர் அணியில் தற்காப்புக் கலை கற்றவர்களுக்கு இடம் அளிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அ்த அறிவிப்பில், "திமுக தொண்டர் அணியின் மாவட்ட தலைவர், துணைத் தலைவர், அமைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு 50 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 5.5 அடி உயரம்
மாவட்ட துணை அமைப்பாளர் 45 வயதுக்கு மிகாமலும், 5.5 அடி உயரத்துக்கு அதிகமாகவும் கட்டாயம் இருக்க வேண்டும். சிலம்பம், கராத்தே, டேக்வேண்டோ, குங்பூ உள்ளிட்ட தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்றுள்ள கட்சியினரை கண்டெடுத்து தேர்வு செய்ய வேண்டும்" என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் மாவட்ட, மாநகர, பேரூர், பகுதி, ஒன்றிய அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மீண்டும் அந்த பொறுப்புகளுக்கு வர விரும்பினால், அவர்களும் விண்ணப்பிக்கலாம்" என்று பெ.சேகர் தெரிவித்துள்ளார்.

பூத் ஏஜெண்டுகளாக வழக்கறிஞர்கள்
இது ஒருபுறம் இருக்க, தமிழகம் முழுவதும் திமுக பூத் ஏஜெண்டுகள் நியமனமும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், பூத் ஏஜெண்ட்டுகள் திறன்மிக்க இளைஞர்களாக இருக்க வேண்டும்.குறிப்பாக, வழக்கறிஞர்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications