திமுக கூட்டணியில் இ.கம்யூனிஸ்டுக்கு 6 தொகுதிகள் ஓதுக்கீடு... நீண்ட இழுபறிக்கு பிறகு சுமுக முடிவு!
சென்னை: தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக- இந்திய கம்யூனிஸ்டு கட்சி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கட்சிகள் இடையே கூட்டணி, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லீம் லீக் கட்சிக்கு ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன.
தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரசுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் அது இழுபறியில்தான் நீடிக்கிறது. இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்டு உடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் இ.கம்யூனிஸ்ட்டு 10 கேட்ட நிலையில் திமுக 6 தருவதாக கூறியது.
இதனால் பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்தது. கடைசியில் ஒருவழியாக 6 தொகுதிகளை பெற இ.கம்யூனிஸ்ட்டு சம்மதித்தது. இந்த நிலையில் கூறியபடியே இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.